ஓம் முருகன் துணை
உடம்புக்குள் உயிர் இருக்கிறது. உயிரை வளர்க்கத்தான் உடம்பு வளர்கிறது. மனதிற்குள் புத்தி இருக்கிறது. புத்தி வளரத்தான் மனம் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது.
உடம்பை வளர்ப்பது உயிரை வளர்க்கத்தான். உயிரை ஏன் வளர்க்கவேண்டும்? மெய்ஞானத்தை அடைவதற்காக. அது பெரிய விசயம். அது வாழ்வின் குறிக்கோள். அதற்கு நிறைய பாடுபடவேண்டும். மெய்ஞானத்தை பெறுவதற்காக உயிரை வளர்க்கவேண்டும் என்பதுபோலவே குறைந்த பட்சம் ஆனந்தமாக வாழவும் உயிரை வளர்க்கவேண்டும் அதற்கு உடம்பை வளர்க்கவேண்டும்.
புரட்சித்தலைவர் பொன்மனசெம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் உடம்பை மிகவும் கவனமாக வளர்த்தவர். தான் உடம்பின்மீது கவனமாக இருந்ததுபோலவே தன்னை சந்திக்கும் சிறுநடிகர்களையும் உடம்பின்மீது மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று அறிவுரை கூறுவார். அதற்கு எம்.ஜி.ஆர் கூறும் காரணம். ஒரு பாடகன் பாடவரவில்லை என்றால் வேறு ஒரு பாடகன் பாடி அந்த பாடலை படமாக்கிவிடலாம். ஒரு இயக்குனர் அந்த படத்தை இயக்கவரவில்லை என்றால் வேறு ஒருவரை வைத்து படத்தை இயக்கிவிடலாம் ஆனால் ஒரு கதாநாயகன் நடிக்கவேண்டிய படத்தை வேறு ஒரு கதாநாயகன் நடித்தால் அது வேறு ஒருவர் படமாக மாறிவிடும். உன்னை எதிர்ப்பார்க்கும் ரசிகனுக்கு நீதான் நடிக்கவேண்டும் எனவே உடம்பை கவனமாக பார்த்துக்கொள் என்று கூறுவாராம்.
தனது படத்தில் நடிக்கும் சிறு நடிகன்கூட ஒழுக்கம், தண்ணி, புகை என்று இருக்கக்கூடாது. சரியான நேரத்திற்கு படபிடிப்பு தளத்திற்கு வரவேண்டும், படபிடிப்பு விட்டதும் சரியான நேரத்திற்கு வீட்டிற்கு செல்லவேண்டும் என்று கவனம் எடுத்துக்கொள்வார் என்று நடிகர் சிவக்குமார் சொன்னார்.
ஜெமினி ஸ்டியோவில் சௌக்கார் ஜானகி ஒரு படத்தில் நடிக்கும்போது வறுமையின் காரணமாக உணவு உண்ணாமல் இருந்ததால் மயக்கம்போட்டு விழுந்துவிடுகிறார். அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உடம்பு நலபெற்று மீண்டும் படபிடிப்பு தளத்திற்கு வருகிறார். அவரை அழைத்து ஜெமினி ஸ்டியோ நிறுவனர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள் " ஒரு முறை முகத்தில் அரிதாரம் பூசிவிட்டால் உங்கள் நலம் உங்களுக்கு மட்டும் முக்கியம் அல்ல, உலகத்திற்கும் முக்கியம். நீங்கள் எல்லாம் உலகத்திற்கே முக்கியமானவர்கள் உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தாராம். அன்றிலிருந்து உடம்பை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டேன். என்று 89வயது சௌகார் ஜானகி தெரிவித்தார். சௌக்கார் ஜானகியை இன்று பார்ப்பவருக்கும் அவரின் உடல்நலம்பேணுதல் உவகை அளிக்ககூடியதாக இருக்கும். அத்தனை நேர்த்தி. அழகு. தெளிவு.
உடம்பை வளர்ப்பதன் மூலம் நமது உயிரை வளர்க்கின்றோம். உடல்மூலமாகவே உயிர் ஆனந்தத்தை மெய்ஞானத்தை பெறுகின்றது.
மனதை வளர்ப்பதன் மூலமாகவே நாம் அறிவை வளர்க்கின்றோம். மனதை எப்படி வளர்ப்பது? நல்ல இலக்கியங்களை கற்பதன் மூலமாக வளர்க்கலாம். நல்ல மனிதர்கள் வாழ்க்கையை கவனித்து நடப்பதன் மூலம் வளர்க்கலாம். கற்றவர்கள் வாழ்க்கை வரலாற்றை, அவர்கள் பெற்ற அனுபவங்களை அறிவதன் மூலமாக மனதை வளர்க்கலாம். நல்ல கதைகளை படிப்பதன் மூலமாக மனதை வளர்க்கலாம், கதையை படிப்பதன் மூலமாக அந்த கதை மாந்தர்கள் வாழ்க்கையை உணர்வை நாம்பெறுகின்றொம் அதனால் மனம் விரிகிறது. மனம் விரியும்போது அறிவு தானே வளர்கிறது.
டாக்டர் கே என்னும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி என்னும் விலங்கியல் நிபுணர் வாழ்க்கை சம்பவத்தைப்பற்றிய ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் என்ற கதையில், டாக்டர் கேவுடன் பழகுவதால் ஒரு வனத்துறை அதிகாரியின் மனவிரிவு விளக்கப்படுகிறது. டாக்டர் கேயின் தன்னலமில்லா தியாக வாழ்க்கையும். உண்மையான அன்பையும் இந்த கதை நமக்கு வழங்குகின்றது.
இந்த கதையில் குடிகாரர்கள் குடித்துவிட்டு எறிந்த காலிப்பாட்டிலின் கண்ணாடி குத்தி ஒரு யானை கால் வீங்கி நடக்கமுடியாமல் அலைகின்றது. தனது இருப்பிடத்தில் இருந்து கிட்டத்தட்ட நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முதுமலைக்கு சென்று அதற்கு வைத்தியம் பார்க்கிறார் டாக்டர் கே. அதன் பிறகு ஒரு ஆண்டு கழிந்தபோது ஒரு நாள் இரவு டாக்டர் இருப்பிடத்தில் யானை வாசம் அடிக்கிறது. அதனை அறிந்த டாக்டர் கே என்னவென்று இருட்டில் சென்று பார்க்கிறார். ஒரு இரண்டு வயது யானைக்குட்டி அவரிடம் தனது காலில் அதேபோல் பீர்பாட்டில் குத்தியதை காட்டுகிறது. டாக்டர் கே வைத்தியம் செய்கிறார். அந்த குழந்தையானை முதுமலையில் இருந்து இவரை தேடிவந்து இருக்கிறது. அந்த குழந்தையுடன் டாக்டர் கே முன்னால் மருத்துவம் செய்த கொம்பன் யானையும் அதன் கூட்டமும் வந்து இருப்பது இருட்டில் தெரிகிறது. அவை அனைத்தும் டாக்டர் கேவுக்கு தங்கள் பிளிறலால் நன்றி சொல்கிறது. இந்த நம்பிக்கையை அன்பை கருணையை டாக்டர் கே எதனால் பெற்றார். பணத்தாலா? பட்டத்தாலா? இல்லை. தனது மனத்தின் விரிவால் அதற்குள் பெருகும் அன்பால் பெற்றார். இந்த கதையை படிக்கும்போது நம் மனமும் நம்மை அறியாமல் கருணையில் நனைகின்றது.
வனத்துறை அதிகாரி டாக்டர் கேவுக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார். அது கைநழுவி விடுகிறது. ஆனால் டாக்டர்கே அதற்கெல்லாம் மனம் கொடுக்கவில்லை. அவரின் செயற்கரிய செயலுக்கு முன்னால் எந்தபட்டமும் அவருக்கு பெரிதில்லை என்பதை கதை காட்டுகின்றது.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரி செயகலா தார்-என்ற குறள் டாக்டர் கே போன்றவர்களைப் பார்க்கும்போது தன் அர்த்தத்தின் வலிமையை நமக்குள் ஏற்றிச்செல்கிறது.
வனத்துறை அதிகாரி டாக்டர் கேவுக்கு பத்மஸ்ரீ பட்டம் கிடைக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார். அது கைநழுவி விடுகிறது. ஆனால் டாக்டர்கே அதற்கெல்லாம் மனம் கொடுக்கவில்லை. அவரின் செயற்கரிய செயலுக்கு முன்னால் எந்தபட்டமும் அவருக்கு பெரிதில்லை என்பதை கதை காட்டுகின்றது.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரி செயகலா தார்-என்ற குறள் டாக்டர் கே போன்றவர்களைப் பார்க்கும்போது தன் அர்த்தத்தின் வலிமையை நமக்குள் ஏற்றிச்செல்கிறது.
கதையின் ஆரம்பத்தில் படிப்பது மதிப்பெண்பெறுவது வேலைக்கு போவது நன்றாக சம்பாதிப்பது மகிழ்ச்சியாக வாழ்வது என்ற சராசரி தனத்தில் சிக்குண்ட மானிட அகமாக வனத்துறை அதிகாரி வருகின்றார். அன்பு தியாகம் உழைப்பு நுண்ணறிவு பெருங்கருணை என்று உயர்வதை காட்டும்விதமாக டாக்டர் கே வருகின்றார். டாக்டர் கேவால் வனத்துறை அதிகாரி மனம்வளர்ந்து அறிவு மேன்மைபடுகின்றது. காந்தத்தை தொடும் இரும்பும் காந்தம் ஆவதுபோல இந்தகதை மானிட மனம் வளர்ப்பதை காட்டுகின்றது.
மனிதன் உடலை வளர்க்கவேண்டும் அது உயிரை வளர்க்கும். மனிதன் மனத்தை வளர்க்கவேண்டும் அது அறிவை வளர்க்கும்.
No comments:
Post a Comment