ஜெயங்கொண்டத்தில் இருந்து இரவு காட்டு மன்னார்கோவிலுக்கு இரவு கடைசி பேருந்தில் வந்தேன். நான் பேருந்து
நிலையத்திற்குள் நுழைந்தபோது சிதம்பரம் கடைசிப்பேருந்து தூரத்தில் போவது தெரிந்தது.
ஓடிப்போய் ஏறமுடியாது.
எனக்கு நாளை மதியம் அண்ணாமலை
பொறியியல் கல்லூரியில் இளங்கலை ஆசிரியர் பயிற்சி தேர்வு. பு.முட்லூர் வீட்டில் இருந்து
செல்லவேண்டும்.
காட்டுமன்னார்
குடி அனைத்துகடைகளும் தங்கள் வாய்மூடி விழிமுடிக்கொண்டு தூங்க தொடங்கிவிட்டன. வீதி
விளக்குகள் மட்டும் மஞ்சள் தெளித்துக்கொண்டு சோர்ந்து நின்றன.
மூன்று படியுள்ள பழக்கடையின் மேல் படியில் தெற்கு வடக்கில் நீட்டிப்படுத்துவிட்டேன். சிதம்பரம் செல்லும் முதல்பேருந்தின் இறைச்சலில்
எழுந்து வீட்டுக்கு வந்து குளித்து உண்டு, நடராஜர்கோவில் சென்று வணங்கி தேர்வு எழுதி
வெற்றிப்பெற்றேன். இறைவன் அருள்.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
சென்னை வந்த முதல்நாள் இரவு எங்கு படுப்பது என்று தெரியாமல் அண்ணாசாலையில் இரவு முழுவதும்
நடந்ததாக சொன்னார்.
இரவுதான் தூங்குவதற்கான நேரம். இரவில் புதிய இடத்தில் படுத்தால் பயம்வரும். தூக்கம் ஓடிப்போய்விடும்.
எழுத்தாளர் பிரபஞ்சனின் “தலை சாய்க்க” என்ற சிறுகதையில் இடப்பற்றாகுறையால் சொந்தவீட்டில் தூங்கமுடியாதவனின் நிலையை எடுத்துக்காட்டுகின்றது.
நாளைக்காளை நடக்கவிருக்கும் திருமணத்திற்கு மாலை சென்று வரும் மனைவியுடன் மாமியாரும் வந்துவிடுகிறார் வீட்டில் படுத்து எழுந்து காலையில் திருமணத்திற்கு செல்ல. அந்த ஒருவர் வந்துவிட்டதாலேயே வீட்டுக்குள் படுக்க முடியாமல் முன்னால் உள்ள வரண்டாவில் அப்பா அம்மா படுத்திருக்கும் இடத்திற்கு வந்துவிடுகிறான். அன்று மழைவேறு பெய்கின்றது. நல்ல மழைப்பெய்தால் வீடு ஒழுகும், வீடே உட்கார்ந்து இருக்கவேண்டும்.
அப்பா அம்மா தூங்கும்வரை வெளியில் சென்று வர விரும்புகின்றான். மழையில் நனைந்தபடி செல்கின்றான். நேரத்தை கடத்துவதற்காக வேண்டாத விரும்பாத படத்திற்கு சென்று உட்கார்ந்து வருகின்றான்.
ஜன்னல்ஓரம் கிடக்கும் பெஞ்சில் படுக்கிறான். தூக்கம்வரும்போது பாயை ஜன்னலில் கட்டி இருக்கும் மாடு தலையை விட்டு பாயை திங்க இழுக்கிறது. பெஞ்சை நகர்த்திப்போட்டால் வீட்டு சாக்கடை நாற்றம் குமட்டுகிறது. இரவு முழுவதும் தூங்க முடியாமல் கிடக்கிறான். விடியட்டும். விடிந்ததும் வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு சென்றுவிடுவார்கள். வீட்டுக்குள் படுத்து தூங்கிவிடலாம் என்று விடிவதற்காக காத்திருக்கிறான்.
வீட்டில் உள்ளவர்கள் திருமணத்திற்கு சென்றபின்பு உள்ளே சென்று தூங்கப்போகிறான். இரவு பெய்த மழையில் நனைந்ததால் அவன் உடம்பு அனலாக கொதிக்கின்றது.
அதனால் என்ன? தூங்கத்தானே போகின்றோம். என்று கதையை பிரபஞ்சன் முடிக்கின்றார்.
தூங்குவதற்காக விடியவேண்டும் என்று காத்திருக்கும் ஒரு சமுகவாழ்வின் விளம்புநிலையை இந்த கதை காட்டுகின்றது.
வாழ்வின் அன்றட எளிய நிகழ்வு ஒன்று எத்தனை பெரிய சுமையாக சவாலாக மாறுகின்றது என்பதை இந்த கதை சித்திரம் வரைகிறது.
இந்த எளிய நிகழ்வை நாம் யதார்த்தம் என்று கடந்துசென்றுவிடுவோம் ஆனால் எழுத்தாளன் தன் நுண்அவதானிப்பால் அதை வாழ்வின் கனமான பகுதி என்று நம்முன் எடுத்துவைத்து அதில் உள்ள சிடுக்குகளை கடப்பதும் வாழ்வின் தவம்தான் என்று காட்டுகின்றான். வாழ்வு எத்தனை சிறிய சிக்கலில் மனிதனை நிறுத்தி தாயம் விளையாடுகிறது.
சமுகத்தின்மீதும் சகமனிதர்கள்மீதும் ததும்பும் அன்பு கொண்டவர் பிரபஞ்சன் என்பதற்கு இந்த கதை ஒரு உதாரணம்.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்
No comments:
Post a Comment