ஓம் முருகன் துணை
நேற்று இரவு பவா
செல்லதுரை சொன்ன மனுசி-பிரபஞ்சன் சிறுகதையை கேட்டேன்.
நன்றி பவா.
உங்களை க.சீ. சிவக்குமார்
“ நீ ஒரு இசைமயமானவன்“ என்று சொன்னதாக சொன்னீர்கள். நான்சொல்கிறேன் “நீ ஒரு கதைகனிந்த
பெரும்பலா. உன்னில் இருந்து சுவையான கதைநதி பாய்ந்து என்னை திக்கவைக்கிறது“ . உங்கள்
கதைகளை கேட்கும்போது உங்களை கட்டிப்பிடித்து முத்தமிட நினைக்கிறேன். கதை சொல்லும்போது
நீ ஒரு தாயாக தெரிகிறாய். .
மனுசி சிறுகதை
லட்சுமி என்ற பசுவுக்கும் அதை வளர்க்கும் அம்மாவிற்கும் உள்ள பாசத்தை வெறுப்பை சொல்லும்
கதை. கூடவே மருமகள் உடன் மாமியர் கொள்ளும் மனவிலக்கத்தையும் காட்டும் கதை.
பெண்பிள்ளைகள்
பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்துக்கொள்ளும் இந்த காலத்தில்தான் பெண்பிள்ளை பெற்று எடுக்காத
மருமகளையும், மாட்டையும் வெறுக்கும் தாயின் மனநிலையை மகன் கதைச்சொல்லியாக இருந்து சொல்லும்
கதை.
பின்னலூரில் குடியிருந்தபோது
எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்த ஆச்சி அந்த ஊரில் இருந்த ஒரு ஆச்சியைப்பற்றி
சொன்ன செய்தி ஞாபகத்தில் வருகிறது.
“அவள் ஆண்டுக்கு
ஒரு ஆம்பள பிள்ள பெப்பா, அவள் வளர்க்கிற பசு
ஆண்டுக்கு ஒரு கெடெரிக்கன்ணுப்போடும். அவளுக்கு
பூரிப்பு வராம இருக்குமா?”
பிரபஞ்ச தத்துவம்
சொல்லும் ரகசியம் என்னவென்றால் ஒரு குடும்பத்தில் பெண்ணும், மாடும் கருவுற்று இருந்தால்,
முதலில் பசுமாடு எந்த கன்றைபோடுமோ அந்த வகை
குழந்தைதான் பெண்ணும் பெற்று எடுப்பால் என்று எனது அத்தை சொன்னார்கள்.
மனுசி சிறுகதையிலும் அந்த வீட்டுபெண்கள் ஆண்பிள்ளைகளை பெறுகின்றார்கள்.
அந்தவீட்டிற்கு வரும் மாடும் ஆண் கன்றுகளைத்தான் ஈனுகின்றது.
ஆண்கன்றை ஈன்றதாலேயே
பிள்ளைகளைவிட மேலான பாசம்வைத்து பிள்ளைபோல் வளர்த்த பசுவை அந்த கதையின் அம்மாவெறுக்கின்றார்.
“பெண்ணை புரிந்துக்கொள்ள
பெண் பேசுவதை கவனிக்காதே, பெண் செய்வதை கவனி“ என்று ஓஷோ சொல்கிறார்.
தனது மருமகளும்
பெண்ணை பெற்று எடுக்கவில்லை, தான் வளர்க்கும் மாடும் கெடெரி கன்றை ஈனவில்லை என்று மருமகளை
ஈட்டுக்காட்டும் அம்மா. ஒருநாள் தான் ஒரு பெண்குழந்தையை பெற்றதாகவும், அது அம்மைநோயில்
இறந்துவிட்டதாகவும் அந்தகதையில் வரும் அம்மா இந்த கதையில் அழுகிறாள்.
மாட்டை வெறுக்கும்
அம்மா அந்த மாட்டை விற்க சொல்லிவிடுகிறார்கள்,அம்மாவின் மனமாறுபாட்டை அறிந்த கதைச்சொல்லியும் மாட்டை விற்றுவிடுகிறார். அந்த மாடு வாங்கியவருடன் சென்ற பின்பு அம்மா அழுவைப்பார்த்து
கதைச்சொல்லி அம்மா அந்த குழந்தைகக்காக அழவில்லை என்று சொல்கிறார்.
அவளையும் அறியாமல் அவள் மாட்டுக்காகத்தான் அழுகிறாள்.
இத்தனை பாசம் வைத்த
மாட்டை அம்மா வெறுப்பது பெண்கன்றை ஈனவில்லை
என்பதற்காக மட்டும் இல்லை. உள்ளார்ந்த ஒரு காரணம் உள்ளது கதையில்.
எட்டுத்தலைமுறையாக
அந்த வீட்டில் பெண் பிள்ளைகள் பிறப்பதில்லை. கொள்ளுதாத்தாவின் கொள்ளுதாத்தா அவரின்
மனைவியை சந்தேகப்பட்டு கழுத்தறுத்து கொன்றுவிட்டார். தாத்தா பாட்டியிடம் எதுவும் கேட்கவில்லை.
பாட்டியும் என்ன ஏது என்று தெரியாமல்,எதுவும் சொல்லாமலே செத்துவிட்டது. அது பத்தினிப்பெண்ணின் பெண்சாபம்.
அம்மாவிற்குள்
அந்த சாபத்தை போக்கடிக்கவேண்டும் என்ற பெரும் தீவிரம் இருக்கிறது. அம்மா பெற்றும் தக்கவைக்கமுடியாத
ரணத்தில் இருக்கிறாள். அம்மாவின் தொடர் ஓட்டத்தில் குச்சி மருமகள் இடத்திற்கு வந்துவிட்டது,
மருமகள் ஆண்பிள்ளையாக பெற்று இலக்கை தொடாமலே ஓய்ந்துவிட்டாள். அந்த தொடர் ஓட்டத்தில்
மருமகள் வீட்டில் இருந்து வந்த பசு லட்சுமி கலந்துக்கொள்கிறது அதுவும் இலக்கை தொடாமலே
ஆண்கன்றாக ஈன்று நின்றுவிடுகிறது. பெண்பிள்ளைப்பெற்று
அந்த
குடும்பம்மீது இருக்கும் பெண்சாபத்தை கழுவமுடியவில்லை என்ற ஆரா ரணம் இந்த கதையில் உள்
உறைந்து உள்ளது.
மற்றவர்கள் இடம்
இல்லாதது தன்னிடம் இருக்கிறது என்று காட்டி மற்றவர்கள் மனதில் கடுகளவாது பொறாமைவிதையை
தூவுவது இந்த அம்மாவின் குணம். அதில் சந்தோஷப்படுவது இந்த அம்மாவின் குணம். அந்த குணம்
கொண்ட அம்மாவின்வீட்டில் பெண் என்ற பேருக்கு ஒரு பசுகூட கன்றுபோடவில்லை என்றால் அந்த
அம்மாவின் மனதில் எத்தனைபெரிய பொறாமைவிதை இந்த உலகும் காலமும் விதியும் கடவுளும் தூவி
சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கிறாள். என்று நினைக்கவேண்டி உள்ளது.
நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய் என்கிறது உபநிடதம்.
மனிதன் விரும்பியதை
மட்டும் இல்லை வெறுப்பதையும் அடைந்தே தீர்கின்றான் என்கிறது உளவியல் தத்துவம்.
அப்பாவைப்போல குடிகாரன்
தனக்கு கணவனாக வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். அப்பாபோலவே கணவன் வந்து அமைந்தார் என்று
ஆண்டாள் P.சொக்கலிங்கம் நிகழ்வில் ஒரு பெண்மணி சொல்கிறார்.
அந்த கழுத்தறுப்பட்ட
பாட்டி அந்த குடும்பத்தின்மீது சாபம் இட்டதோ இல்லையோ. அந்த குடும்பத்திற்கு வாக்கப்பட்டுவரும்
பெண்கள் மனதில் அந்த நிகழ்வு பெரும் அதிர்வாக நுழைந்து நிலைகுலைய செய்து எண்ணங்களை
பாவத்திலும் சாபத்திலும் கொண்டு சென்று நிலைக்கவைத்து விடுகிறது. எங்கிருந்து வந்தாலும்
அந்த குடும்பத்திற்கு வரும் பெண்கள் எல்லாம் அந்த கழுத்தறுப்பட்ட பாட்டியின் வடிவங்கள்தான்.
அந்த குடும்பத்திற்கு அந்த பாட்டியின் இடத்திற்குதான் அவர்கள் வருகிறார்கள். அவர்கள்
உள்ளுக்குள் அந்த குடும்பத்தை அவர்களையும் அறியாமல் சபிக்கிறார்கள். அது ஒரு எண்ண அலையாக
பரவிக்கொண்டு இருக்கிறது. அதுதான் அவர்களை அந்த குடும்பத்திற்கு உரிய பெண் பிள்ளைகளை பெற்று எடுக்க முடியாமல்செய்கிறது. அந்த எண்ணங்கள் அவர்கள் வளர்க்கும் மாட்டுக்குள்ளும்
நுழைந்து இறந்தப்பாட்டிக்கு நீதி செய்கிறது.
அந்த குடும்பத்தில்
கொள்ளுதாத்தாவின் கொள்ளுதாத்தா மட்டும் இல்லை, இதோ இந்த அம்மாகூட பெண்களை (மருமகளை,
மாட்டை) உள்ளார்ந்து மகிழ்விக்கவில்லை.
பெண்ணை மகிழ்விப்பவருக்கே
கண்ணீர் மறைந்து ஆனந்தம் பெருகுகிறது. கதையின் உள்ளீடாக இந்த கதை அந்த இடத்தை தொடுகிறது.
எண்ணம் மாறாமல் வாழ்க்கை மாறுவதில்லை.
இந்த கதையை சொல்லும்போது
பவா செல்லதுரை தனது தாயுக்கும் மீனம்மா என்ற மாட்டிற்கும் உள்ள நெருக்கத்தை சொல்கிறார்.
மாடு செல்லவம் மட்டும் அல்ல அன்பும்கூட. அந்த அன்பை மாட்டுடன் வாழ்ந்துப்பார்த்தவர்களால்தான்
பெற்றுக்கொள்ள முடியும்.
பவா செல்லதுரையும்
அவரது அம்மாவும் அவர்வீட்டு நாயும் மீனம்மாவும் வயலுக்கு செல்கையில் பவா செல்லதுரையின்
வயலில் அறுவடை நெல்லை கசக்கி திருடுபவர்களைப்பார்த்து இவர்கள் அமைதியாக நிற்க. அந்தமாடு
பொறுக்க முடியாமல் செருமியதையும் அதைக்கேட்டு திருடர்கள் எழுந்ததையும் பவா செல்லுதுரை
சொல்லும்போது அந்த மீனம்மாவின் முகமும் ஸ்பரிசமும் கைகளுக்குள் வந்துபோனது.
திருடர்களைப்பார்த்து
கொதிக்காமல் அவர்களின் கயமையை கண்டுகொண்ட கம்பீரத்துடன் வேண்டிய அளவுக்கு கசக்கிக்கொண்டுபோகங்கள்
என்று பவாவின் தாய் திரும்பிகாட்சியும், அந்த திருடர்கள் கசக்கிய நெல்லை விட்டுப்போன
காட்சியும் அறத்தின் மென்மையை வன்மையை உண்மையை எழுந்து வரவைக்கிறது.
பவாவின் மீனாம்மா
விற்கப்பட்டு அது சிலநாள் கழித்து பவாவின் வீட்டிற்கே வந்ததும். அந்த பணத்தை செலவு
செய்யாமல் வைத்திருந்த பவாவின் அம்மா அந்த பணத்தை வாங்கியவரிடம் கொடுத்து மாட்டை விட்டுவிட்டு
திரும்பிப்போகசொன்னதும் அன்பின் ஆழமும் உயரமும்.
நாங்கள் ஒரு வெள்ளைமாடு
வளர்த்தோம். எங்கள் ஐந்துபேரை பெற்ற அம்மாவிற்கு அதுவும் ஒரு குழந்தைதான். அம்மாவின் வார்த்தையை அது மீறியது இல்லை. அம்மாவின்
பசியை அம்மா அறிந்தாரா இல்லையா என்று தெரியவில்லை ஆனால் அம்மா அதன்பசியை அறிந்து இருந்தார்.
அதற்கு உணவு இல்லை வைக்கோல் இல்லை புல் இல்லை என்றால் அம்மா அழுதுவிடுவார்.
ஒரு மழைநேரம் மாலை
அம்மா வைக்கோல் நனைகிறது என்பதற்கா மாட்டுக்குபோட வேண்டிய அளவு வைக்கோலை பிடிங்கிவந்து
வீட்டு வாசல்படிக்கு முன்னால் வீட்டுக்குள் போட்டுவிட்டு மழையில் நனைந்தபடி வாசலில்
கிடந்த துணிகளை பொருள்களை சேகரித்துக்கொண்டு இருந்தார். இரண்டுவயது கைக்குழந்தையாக
இருந்த எனது தங்கை சின்னவண்டு வாசல்படியில் உட்கார்ந்து மழையைப்பார்த்துக்கொண்டு இருந்தது.
தங்கையின் பின்னால் வீட்டுக்’குள் வைக்கோல்.
வாசலில் மழையும் அம்மாவும்.
மேச்சலுக்கு சென்ற
வெள்ளைமாடு மழையில் நனைந்து ஓடிவந்து அவசரமாக வீட்டுக்குள் நுழைந்துவிட்டது. வாசல்படியில்
குழந்தை. அம்மா பதறி “ஐயோ. என் புள்ள” என்று ஓடிவந்துப்பார்க்கிறார்கள். வெள்ளைமாடு முன்னங்கால்
இரண்டையும் தூக்கி வைக்கோல்மீது வைத்து வைக்கோல் திங்கிறது. பின்னங்கால் வாசலுக்கு
வெளியில் இருக்கிறது. குழந்தை மாட்டு வயிற்றுக்குகீழே உட்கார்ந்து மடியைப்பார்த்து
சிரிக்கிறது.
நாங்கள் அம்மாவின்
பிள்ளைகள் மட்டும் இல்லை வெள்ளைமாட்டின் குழங்தைகள்கூடதான் என்பது இப்போது நினைக்கையில்
புரிகிறது.
ஒரு நாள் அப்பா வெள்ளைமாட்டை விற்றுவிட்டார்கள். அம்மாவும் அழுதார்கள். அப்பா தனது பேச்சால் கண்ணீரை மறைத்தார்கள். வெள்ளைமாடும் ஒருநாள்அம்மாவை தேடிவந்தது.
அம்மா தன்னால்
முடிந்தது ஒருவேளை உணவுஊட்டி அனுப்பி வைத்தார்.
விலங்குகள் அன்பு
காட்டுவதில் மனிதர்கள்முன் மனிதர்களைவிட மேலானவர்கள். மனிதர்கள் எண்ணங்களால் பலநேரங்களில் விலங்கின்முன் விலங்கைவிட கீழனவர்கள்.
மனுஷி கதையிலும்
லட்சுமி மாடு திரும்பி வந்துவிடவேண்டும்போல் இருந்தது.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.