Saturday, November 23, 2019

அருளென்னும் அன்பின் குழவி (சிறுகதை)


ஓம் ஸ்ரீமுருகன் துணை
அருளென்னும் அன்பின் குழவி (சிறுகதை)
ராமராஜன்மாணிக்கவேல்

குருதேவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கேசவ சந்திரசேனின் கமலகுடீர் வீட்டிற்கு இன்று எழுந்தருளி இருக்கின்றார். 

நோயில் கிடக்கும் கேசவரைப் பார்க்கத்தான் குருதேவர் வந்திருக்கிறார். கேசவர் நோயுற்றால் குருதேவர் துடிக்கிறார். அழுகிறார்,அன்னைக்கு இளநீர் வைத்து படைக்கிறார்.

உலகாதாய மனிதர்களின் கண்களுக்கு  இது ஒரு பாசத்தின் நாடகம்.  இது வெறும் பாசம். பிரதிபலன் எதிர்ப்பார்க்கும் மானிட அன்பு. இவ்வளவுதானா? குருதேவருக்கும் கேசவருக்கும் இடையில் உள்ள அன்பு.  இல்லை..இல்லை..  இறைவனின் அருள்நாடகத்தின் கவிதைத்தருணம் அது. அருளென்னும் குழவியை ஈனும் அன்பின் தாய்மைத்தருணம் அது.
கமலகுடீர் வீட்டின் மாடியில் உள்ள விருந்தினர் அறைக்குத் தெற்கு வராந்தாவில் போடப்பட்டு இருந்த கட்டிலில் அமர்ந்திருந்த குருதேவர் கேசவரைப் பார்க்கும் ஆவலில் அமைதி இழக்கத்தொடங்கினார்.

குருதேவரின் கவனத்தைத் திருப்புவதற்காக பிரசன்னர் பணிவாக “அவரது நிலை இப்போது அடியோடு மாறியுள்ளது. தங்களைப்போலவே அவர் தேவியிடம் பேசுகிறார். அம்பிகை பேசுவதைக் கேட்டு சிரிக்கிறார், அழுகிறார்” என்றார்.

உலகின் தாயான அம்பிகையிடம் கேசவர் பேசினார், சிரித்தார், அழுதார் என்பதைக் கேட்டதும் குருதேவர் பரவசநிலை அடைந்தார். அப்படியே சமாதி நிலையில் ஆழ்ந்தார்.

கேசவர் இன்னும் குருதேவரைப் பார்க்க வரவில்லை, உடல் உயிர் மற்றும் ஐந்து புலன்களாலும் நோயின் வன்மத்தையும், இருமலின் வலியையும் அறிந்தபடி வேறு அறையில் இருந்தார் கேசவர். வலி..வலி..வலி..உடலின் ஒவ்வொரு துளியிலும் வலிமட்டுமாகி இருந்தார் கேசவர்.

கேசவசந்திரசேன் என்றால் கல்கத்தாவில் தெரியாதவர்கள் யாராவது இருக்கமுடியுமா? கல்கத்தாவில் ஆண்பிள்ளைகள் பிறந்தால் கேசவரின் சீடராக ஆகவேண்டும் என்ற ஆவலுடன்தான் வளர்ந்தார்கள். 

இல்லத்தில் திருமகளும் எண்ணத்தில் கலைமகளும் செயலில் மலைமகளும் கலந்து அவரில் பூத்திருந்தார்கள். சுகந்தத்தால் வண்ணத்துப்பூச்சியை இழுக்கும் மலர்போல அவர் குணத்தால் வங்காள இளைஞர்களை இழுத்துக்கொண்டு இருந்தார்.

இன்று பூ உதிர்ந்த மரமாக மட்டும் இல்லை இலையும் உதிர்ந்த மரமாக அவரை ஆக்கிவிட்டது நோய். பிரமசமாஜக் கோயிலிலோ, டவுன்ஹாலிலோ அவர் சொற்பொழிவு நடத்துவதைப் பார்த்தவர்கள் இன்றுப் பார்த்தால் தங்கள் கண்களை தாங்களே நம்பமாட்டார்கள். கண்ணால் காண்பதும் பொய் என்ற உண்மையைப் புரிந்துக் கொண்டு விடுவார்கள்.  

வலிமையின் எடை என்ன என்பதை அளக்க வலியைவிட பெரிய தராசு இல்லைபோலும் அதனால்தான் நம் முன்னோர்கள் வலியை வலிமைக்கு நேராக வைத்து இதற்கும் வலி என்றே பெயர் வைத்தார்களா?

கேசவரின் இருமலைக் கண்டவருக்கும், கேட்டவருக்கும் அந்த வலி தங்களுக்குள்ளும் நுழைந்து பெருகுவதை உணர்ந்து அழுவார்கள். அத்தனை வலி..   

கட்டிலில் உடல் உறுத்தாத மென்படுக்கையில் அசையமுடியாமல் கிடந்த கேசவருக்கு அவர் கைகூட வெகுதூரத்தில், வேறு யாருடைய உறுப்புபோல கிடந்தது. தலைமாட்டில் இருந்த தாயாரும், நெஞ்சறிகில் இருந்த குழந்தைகளும் அவரின் நெஞ்சை தடவி விட்டார்கள்.

எங்கோ வெகு உயரத்தில் இருந்து மலையில் இருந்து வழியும் அருவிப்போல் கண்ணீர் தனது கன்னத்தில் வழிந்து காது மடல்களை நினைப்பதை உணர்ந்து தனது தலையே பெரும் மலையாக மாறிவிட்டதாகவும் தான் அதன் அடியில் நினைந்து கிழிந்து கிடக்கும் துணிபோல் தன்னை உணர்ந்தார். 

கேசவரின் மாணவர் ஒருவர் வந்து குருதேவர் வந்துவிட்டார் மாடியில் காத்திருக்கிறார் என்றுச் சொல்லி வெகுநேரம் கடந்தப் பின்பும் அவரால் எழுந்து குருதேவரைப் பார்க்க செல்லமுடியவில்லை. நோயின் பெரும் வலிக்கும் உடல் பற்றிய மாறுபட்ட நினைவுக்கும் இடையில் தவித்துக்கொண்டு இருந்த கேசவர் நெஞ்சம் மட்டும் இப்போது பெரும் குளிர் தடாகமாக மாறி அந்த தடாகத்தில் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் பொற்பாதம் தாமரைமலர்போல பூப்பதை உணர்ந்தார்.

தாயின் மணம் கண்ட குழந்தையின் சிலிர்ப்பு கேசவரிடம் பரவியது. கண்களால் சிரித்து பரவசப்பட்டார். பெறுவதற்கு அறிய பெரும் பேற்றை தான் அடைந்துவிடப்போவதாகவும். மானிடப்பிறவிப் பெற்றதன் உன்னத பொற்தருணம் குருதேவர் வடிவில் வந்து தனது வீட்டில் காத்திருப்பதாகவும் மனக்குரல் சொன்னது. 

அப்போதே தேவருக்கும் மூவருக்கும் கிடைக்காத குருதேவரின் பொற்கமல திருமலரடியில் தனது சிரம் வைக்க ஏங்கியது அவர் மனம். அது முடியுமா? அதுமட்டும்போதும் இப்போது. யாராவது தன்னைத்தூக்கிப்போய் குருதேவரின் காலடியில் போட்டால்போதும் என்று நினைத்தார்.  அந்த நினைப்பு எழுந்தபோதே அந்த நினைப்பை வெட்டிப்போகும் மின்னல்போல் ஒரு பழைய நினைவு குறுக்கு வெட்டியது அவர் நெஞ்சத்தை.

குடும்பக்கௌரவம், பணம், படிப்பு, அறிவு, மொழிப்புலமை, ஆங்கில அறிவு ஆதி பிரமசமாஜத்தை தோற்றிவித்த தலைவர் என்னும் பெரும் சிறகுகளால் வங்கதேசத்தின் உச்சிவானத்தில் பறந்த பெரும்பறவை நான். 
வங்கதேசத்தின் நாளைய வரலாற்று நாயகர்களின் வழிகாட்டியாக வலம்வரும் கலங்கரை விளக்கம் நான்.

நான்..நான். நான் என்று எத்தனையோ நான்களால் விளைந்த புகழால் மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே கட்டி எழுப்பப்பட்ட பெரும் புகழ்க்கோட்டையை நத்தைபோல் முகில் சுமந்துக்கொண்டு வாழ்ந்த நானாகிய அன்றைய கேசவர் இன்றைய கேசவரின் நினைவில் எழுந்து கம்பீர நடைப்பயின்றார்.  
  
புகழ் என்பது ஒரு பனிப்பொழிவுப் போன்றது. அதற்கென்று எந்த தனி எடையும் இல்லை ஆனால் அது பொழிந்து பொழிந்து படிந்து இருகி கனத்து மலையாகி விடுகின்றது. புகழ் பனிப்பொழிவு நடக்கும் தருணத்தில் தன்னைத்தவிர எதையும் பார்க்கமுடியாத வெள்ளை இருட்டு மனிதனை சூழ்ந்துவிடுகின்றது.  அதைத்தாண்டி உலகம் என்ற ஒன்று உள்ளது என்பதை  பார்க்கமுடியாமல் ஆகிவிடுகின்றான் மனிதன்.  வானும் மண்ணும் எங்கும் ஒரே பனித்திரைதான் அதுதான் வாழ்க்கை என்றும் நம்புகிறான் மனிதன்.    

ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் புகழ் பனிப்பொழிலாய் கேசவரை  மூடி மறைத்திருந்த அந்த நாளில் அவரின் ”நிமாய் சன்னியாசம்” என்னும்  நாடகத்தை  முகஸ்துதி செய்து கெடுத்த  அவரின் மாணவர்களில் ஒருவன் அவரை “கலியுகத்தின் சைதன்யதேவர் நீங்கள்!” என்று புகழ்ந்தான்.

புகழென்னும் மாய சிறகு விசித்திரமானது அது முளைக்கும்போதே மண்ணைமறைத்துவிடும் அது விரியும்போதோ விண்ணை மறைத்துவிடும்.

அன்று கேசவரின் அருகில் அமர்ந்து இருந்த குருதேவர் கேசவரின் புகழுக்கு மயங்கும் குணம் கண்டு அமைதியாக இருந்தார். யார் அறியமுடியும் கடவுளின் திருவுள்ளம். அவர் அமைதியாகத்தான் இருந்தாரா? அல்லது அவரின் புகழ்நோயிக்கு மருக்துக்கொண்டு வந்திருந்தாரா? அன்னைக்காளித்தான் அறிவாள். அன்னை சொல்லாமல் அவர் எதையும் சொல்லுவதும் இல்லை. அன்னை செய்விக்காமல் அவர் எதையும் செய்விப்பதும் இல்லை. அவர் பாவமுக நாயகர்.    

புகழ் பனி உருகி தலையில் சில்லிட கேசவர் குறும்பு மின்னும் கண்கள் உடன் சிரித்துக்கொண்டே முகத்தை மட்டும் திரும்பி குருதேவரைப்பார்த்து “அப்படியானால் இவர் யார்?” என்றுக் கேட்டார். 

முகஸ்துதி செய்பவர்கள் இடம் பேசுவதற்கு முன்னமே உருவாக்கிய கடன்வாங்கிய சொல்தான் இருக்கும் சூழ்நிலையை வெல்லும் சொல் இருப்பது இல்லை. சூழ்நிலையை அப்போது முளைக்கும் புதிய உண்மைச் சொற்களால்தான் வெல்ல முடியும்.

பேசும் தெய்வம், மனித வடிவில் வந்து நிற்கும் பிரம்மம் அல்லவா  குருதேவர். அவர் கேசவரிடம் ”உங்கள் தாசனுக்கும் தாசன், கால் தூசிக்கும் தூசி” என்றார்.

அது சொல் அல்ல ஞானஒளி சிந்தும் அமுதமொழி, பனிமலையின் தலையில் விழுந்த நெருப்புத்துளி.

பழைய நினைவுகளில் மூழ்கியதால் நெஞ்சம் நெகிழ்வதை அறிந்தார்   கேசவர். பறந்துப்போய் குருதேவரின் காலடியில் விழவேண்டும் என்ற மனவேகம் அவருக்கு எழுந்தது. உடம்போ நகர்ந்து நகர்ந்து போகும் நிலையில் இருந்தது.

பரவச நிலையில் கட்டிலில் அமர்ந்திருந்த குருதேவரை மிகுந்த சிரமப்பட்டு அழைத்து வந்து விருந்தினர் அறையில் இருந்த சோபாவில் உட்கார வைத்தனர் சீடர்கள்.

குருதேவர் மீண்டும் பரவச நிலையில் ஆழ்ந்தார், போதையில் பேசுபவர்போல பேசினார். ”ராக்கால் நீ வந்திருக்கிறாயா?” என்றார். பிறகு எதையோக் கண்டுப் பேசத்தொடங்கினார். “இதோ, இதோ தேவி! அம்மா, நீயும் வந்துவிட்டாயா! காசிப்பட்டுப் புடவையில் எவ்வளவு அழகாகக் காட்சி அளிக்கிறாய்! அம்மா, தொந்தரவு செய்யாதே உட்கார்! என் அம்மா, உட்கார்!” என்றார்.

சோபாவில் உட்கார்ந்து இருந்த குருதேவர் இறங்கி தரையில் உட்கார்ந்துக்கொண்டார். அன்னை சோபாவில் உட்கார்ந்து இருக்கிறாளா? அல்லது தனது பிள்ளையாகிய குருதேவரிடம் விளையாட வந்த அன்னையும் தரையில் உட்கார்ந்துக்கொண்டாளா? ஊனக்கண்கள் அறியுமா உண்மை.

கேசவர் கிழக்கு கதவு வழியாக சுவற்றைப் பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து நடந்து வந்து குருதேவரின் முன்னால் உட்கார்ந்து குருதேவரை தலைத்தாழ்த்தி வணங்கி, குருதேவரது திருவடித்தாமரைகளில் தமது தலையை வைத்துக்கொண்டு நெடுநேரம் அப்படியே இருந்தார். பிறகு எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார்

குருதேவர் இன்னும் பரவச நிலையிலேயே இருந்தார். அவர் தமக்குள்ளே ஏதோ முணு முணுத்துக் கொண்டும் தேவியிடம் பேசியபடியும் இருந்தார்!.
”உங்கள் தாசனுக்கும் தாசன், கால் தூசிக்கும் தூசி” என்று அன்று கேசவரிடம் விளையாட்டாய் ஞானஒளிப் பாச்சிய குருதேவர் இன்று கமலகுடீருக்கு வந்தது கேசவரை பார்க்கவா? அல்லது அன்னையை கேசவருக்கு காட்டவா?    

என் ஊனக்கண்களுக்கு இருபாதமலரில் இருக்கும் ஒரு தலைமட்டும்தானே தெரிகிறது.

“அம்மா!...நீ!..”
ஜுன்-24-2014

No comments:

Post a Comment