Saturday, November 9, 2019

கற்கனிமர வீதி (சிறுகதை)




ஓம் முருகன் துணை

கற்கனிமர வீதி (சிறுகதை)

ராமராஜன் மாணிக்கவேல்

திலகவதி பாட்டிம்மா தானியங்கி  இயந்திரத்தில் பணம் எடுக்கும் அறைக்குள் நுழைந்ததும்யாரோ துபாய் காரன் பொண்டாட்டி வந்து பணம் எடுத்துட்டு போயிருக்காள். செண்டு வாசமும் மல்லிகைப்பூவாசமும் மூக்கை துளைக்குதுஎன்று கூறிய படி கணவன் பாலசுப்பிரமணியன் தாத்தாவைப் அண்ணாந்துப் பார்த்து சிரித்தது.

கீழே சிந்தி கிடந்த மல்லிகைப்பூவைப் பார்த்த தாத்தா பாட்டியின் நுனிமூக்கு புடைக்கும் அழகை  கனிந்து நோக்கி ஏதோ சொல்லவந்தவர் பாட்டியம்மாவின் வைரமூக்குத்தி ஜொளிப்பதை கண்டு   களித்தார். பாட்டிம்மாவின் மஞ்சல்பூசிய நெற்றியில் வைத்திருந்த காசளவு குங்குமம் அடுக்கு செம்பருத்தி வண்ணம் காட்டி தாழ்பூ மணம் பரவசெய்தது.
  
தாத்தா நகர்ந்து பணம் எடுக்கும்  பாட்டிம்மாவின்  பின் கழுத்தை  பார்த்துக்கொண்டு அருகில் நின்றார். பாட்டிம்மா கழுத்தில் இரட்டைவடம் தங்கசங்கிலி மின்னியது.   தோளில் நழுவிய பட்டுத்துண்டை இழுத்து விட்டுக்கொண்டு  அடர்த்தியான தனது வெள்ளை மீசையை வலது கையால் நீவினார். நெய் தடவிய வெள்ளைமீசை மின்னியது. முதுகுக்கு பின்னால் சாலையில் சென்ற வாகனங்களின் விளக்கொளி அவர்கள் முதுகை தடவி நழுவியது. 

பாட்டிம்மாவின்  வெள்ளைமுடிக்கொண்டையில் மலர்ந்து இருந்த கதம்பப் பூச்சரம் மணத்தது. மரிக்கொழுந்து வாசாம் அறைமுழுவதும் நிரம்பியது     பணம் எடுக்கும் கவனத்தில் பாட்டிம்மாவின் முகம் கொண்ட கூர்மையில் பாட்டிம்மா  சின்னக்குழந்தையாக தெரிந்தது.  அந்த முதுதாயிக்குள் அரும்பும் குழந்தைமையை நினைத்து தாத்தா புன்னகைத்தார்.  பெண்மையின் இருபெரும் எல்லைகளை அந்த ஒரு முகத்தில் காட்டி விளையாடியது அந்த கணம். 

பாட்டிம்மாவின் பின் கழுத்தில்  அரும்பிய வியர்வையை தனது வெள்ளை பட்டுத்துண்டால் ஒற்றினார் தாத்தா. வெடுக்கென்று திரும்பி அவர் கையை தட்டிவிட்டு யாரும் தங்களை பார்க்கிறார்களா? என்று கண்களை சுருக்கி கண்ணாடி சுவர்வழியாக வீதியைப் பார்த்துவிட்டு, யாரும் பார்க்கவில்லை என்று தெரிந்ததும் கணவனைப்பார்த்து பொய் கோபம் காட்டி முறைத்தது பாட்டிம்மா. தாத்தா  மென்மையாக சிரித்தார். பாட்டிம்மாவின் முகத்தில் புன்னகைகீற்று.  மீண்டும் அந்த  முகத்தில் குழந்தையும் கிழவியும் ஒன்றுகலந்து வந்து அழகுகாட்டும் விளையாடல். பாட்டியின் கனிந்த பனம்பழம்போன்ற முகம் விளக்கொளியில் பளபளத்தது.

நெற்றில் விபூதியும் தூக்கிய வாரிய சுருண்ட அடர்த்தியான வெள்ளை முடியும், கன்னத்தில் பஞ்சுபோன்ற மீசை முடியும் தாத்தாவின் முகத்தை ஒரு வெண்கல் சிற்பமென நினைவுபடுத்தியது.  தாத்தா பூசியிருந்த விபூதியின் பன்னீர்மணம் காற்றை  மணக்கவைத்தது. 

இயந்திரம் வெளித்தள்ளிய பணத்தை உருவி எடுத்து   தாத்தாவின் வெள்ளை சட்டைபையில் திணித்தபடியே தாத்தாவின் நெஞ்சை தடவியது பாட்டிம்மாவின் தங்கவளையல் கை. கழுவியும்போகாத பாட்டிம்மாவின் உள்ளங்கை மஞ்சல் பூச்சால் உள்ளங்கையில் தங்கம் மின்னியது.
   
நீயே வச்சிக்க, நீயே வச்சிக்கஎன்று தடுத்த தாத்தா, கையில் இருந்த துண்டால் நிதானமாக பாட்டியின் பின் கழுத்து வியர்வையை துடைத்துவிட்டு, தனது முகத்தையும் துடைத்துக்கொண்டார். அது பாட்டிம்மாவின் வியர்வை  மணத்தை முகர்ந்ததுபோல் இருந்தது. மரிக்கொழுந்து மணத்தோடு மஞ்சல் மணமும் தாத்தாவின் நாசியை நெகிழச்செய்தது.
  
தாத்தாவின் முகத்தை அண்ணாந்துப்பார்த்த பாட்டிம்மா தாத்தாவின் மீசையில் ஒட்டி இருந்த பூவிதழை  தனது ஆள்காட்டி விரலால் ஒற்றி எடுத்து தனது வாயில்போட்டு சாப்பி துப்பியது. அது காற்றில் ஓவியம் வரைந்துக்கொண்டே சென்று மண்ணைத்தொட்டது.
 
தாத்தா  தடுத்தும்  கேட்காமல் சில ஐநூறு ரூபாய் நோட்டை தாத்தா சட்டையில் திணித்துவிட்டு, மீதி பணத்தை தனது கைப்பையில் வைத்துக்கொண்டு முன்னால் நடந்து ஏடிஎம் இயந்திரத்தின் வாயிலை தாண்டி படியிறங்கியது பாட்டிம்மா. பாட்டிம்மாவின் கைப்பையில் இருந்து எழுந்தது ரோஜா இதழ்மணம்.

படி இறங்கியபடியேபக்கத்துவீட்டில் யாரோ நெய்சோறு சமைக்கிறார்கள்,   பொதினா வதங்கும் மணம்என்றது பாட்டிம்மா.

சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிய பையன் இரண்டு கைகளையும் தூக்கி காற்றில்  ஆட்டிவிட்டு மீண்டும் வண்டியை பிடித்துக்கொண்டான். பின்னால் சென்ற யாரோ வசைபாடுவது ஒசையாக கேட்டது. அவன் வண்டியில் இருந்து வந்த புகையின் மணத்தால் பாட்டிம்மா மூக்கை முந்தானையால் மூடிக்கொண்டது.

சிதம்பரத்தில்  உறவினர்கள் வீட்டு கல்யாண வரவேற்பு.  மகனும் மருமகளும் வேறு ஒரு கல்யாணத்திற்கு நேற்று இரவு சென்றுவிட்டு கல்யாணம் முடிந்து காலையில்தான் வந்தார்கள்.    மகனும் மருமகளும்  தாங்கள் போய் வருவதாகத்தான் சொன்னார்கள்.  வீட்டுவேலையையும் கவனித்துக்கொண்டு அங்க இங்க என்று அலைந்தால் உடம்பு என்ன ஆவது என்றுதான் மருமகளை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு தாத்தாவும் பாட்டியும் வந்தார்கள்.  மாமனார் மாமியார் நல்லபடியாக போயிட்டு வரவேண்டும் என்று மருமகள் தவிப்பவது அவள் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிந்தது. பெரியவர்கள் இப்படி  கல்யாணம் காட்சி என்று கலந்துகொண்டால் மனம் ஆனந்தபடுமே என்று நினைத்துக்கொண்டும் அனுப்பி வைத்தாள்.
    
திலகா! பாத்து இறங்கு, காலை நன்றாக ஊன்றி வைத்து இறங்குஎன்று பாட்டிம்மாவின் தோளை பிடித்துக்கொண்ட தாத்தாவின் கை பாட்டிம்மாவின் நெல்நாற்று நிற பட்டுப் புடவை வழவழப்பில் வழுக்கியது.

நீங்கள் பார்த்து வாங்கஎன்று முந்தானையோடு சேர்த்து தாத்தாவின் கையை பிடித்துக்கொண்ட பாட்டிம்மா படியில் நிதனமாக அழுத்தமாக  காலை எடுத்து  வைத்து இறங்கியது.  பாட்டிம்மாவின் கறுத்தபாதத்தில் மஞ்சல்பூச்சு மினுங்கியது. சிற்பச்சிலை பாதம். மஞ்சல்பளபளப்பு. மஞ்சலால் கறுப்பும், கறுப்பால் மஞ்சலும் தெய்வீக வண்ணம் காட்டியது. பட்டுப்புடவையின் தங்கசரிகையும் வீதி விளக்குகளும் பாட்டிம்மாவின் பாதத்திற்கு   பளபளப்பை கொடுத்தது.

பாட்டிம்மா கட்டி இருந்த பச்சை பட்டுப்புடவையின் பிரதிபளிப்பா?  பாட்டியம்மாவின் பாதமும் பச்சையாக இருப்பதுபோல் விழிமயக்கு.   தாத்தா கண்களை மூடி திறந்து மீண்டும் பார்த்தார். ஒவ்வொரு படிக்கும் பாட்டியின் பாதம் ஒன்று வெளிவந்து முகம் காட்டுவதும், மற்றொன்று உள்சென்று   மறைவதுமாக நடனம் நடத்தியது. பாட்டிம்மாவின் வெள்ளிக்கொளுசு மெல்ல இசைத்தது.

பாட்டிம்மா இப்பொழுதும் பாதத்தில் மருதாணி வைத்து உள்ளது. மருமகள் வைத்துவிட்டது. மருமகளுக்கு பாட்டிம்மா வைக்கும்போது நடந்தது. உள்ளங்கால் மருதாணி சிவப்பு தாத்தாவின் கண்ணில் தடவியது. அந்த பாதத்தை நெஞ்சில் தாங்கவேண்டும் என்ற நினைவு தாத்தாவிற்கு, எட்டி நடக்கும் அன்னைகாளியின் பாதத்தை பூமியாய் கிடந்து தாங்கும் சிவன்போல படியாய் கிடந்துவிட தாத்தாவிற்கு ஆசை.    கறுத்தம்மா! கறுப்பாயி! கறுமாரி!” என்று முணுமுணத்த தாத்தா.

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே
என்று தாத்தா பாட்டிக்கு மட்டும் கேட்க பாடிய அபிராமி அந்தாதிப்பாடல் பாட்டியின் செவியை இனிக்க வைத்து, பாட்டியை குழைய செய்தது. தாத்தாவின் கையை இருக்கிப்பிடித்தது பாட்டிம்மா. அது அன்பு உருவம்கொள்ளும் கணம். பெண்மை உருகும் தருணத்தில் வலிமை கொள்வது எப்படி?! தாத்தா அந்த பிடியின் கனத்ததை உணர்ந்து நீண்ட சுவாசத்தை வெளிவிட்டார். நெஞ்சு உயர்ந்து தாழ்ந்தது. பாட்டிம்மாவின் மார்ப்பும் ஏறி இறங்கியது.

பாட்டிம்மா சாலையில் இறங்கி வீதியில் நின்றபோது. நடராஜர்கோயில்    மேற்கு கோபுரம் விளக்கொளியில் வானைதொட்டது. கோபுரத்தின் மேலேமட்டும் பனியிறங்குவதுபோன்ற காட்சி. பாட்டி கையெடுத்து   கோபுரத்தை  கும்பிட்டுவிட்டு நடக்க தொடங்கியது.

சாலையோரத்தில் பூப்பந்துகளை ஏந்தி முழம்போட்டு கொடுத்துக்கொண்டு இருந்த பெண்களில் தாவணிப்போட்ட பெண்ணொருத்தி ஓடிவந்து முழம்போட்டுக்காட்டி பூவாங்கிக்கச் சொன்னாள். அவள் இடதுகையில் உயர்கூடையை தொங்கவிட்டிருந்தாள்.  தாத்தா இரண்டு முழம் பூவாங்கி பாட்டியிடம் கொடுத்தார். அதில் பாதியை கிள்ளி பூவில்லாத பூக்காரபெண்ணின் தலையில் வைத்துவிட்டு மீதியை தன் தலையில் கதம்பத்தோடு சேர்த்து வைத்துக்கொண்டு  நடந்தது பாட்டிம்மா. பூக்கார பெண்ணின் விழிகள் பாட்டிம்மாவின் முதுகை தொட்டதை உணர்ந்து தாத்தா பூக்கார பெண்ணை திரும்பிப்பார்த்து சிரித்துவிட்டு சென்றார். அந்த பெண் கண்களை துடைத்துக்கொண்டாள்.

பக்கத்தில் இருந்த டீக்கடையில்  பெரிய இருப்பு வாணலியில் காயும் மசாலாபால் வாசம்காட்டி இழுத்தது.  மசாலா  பால் குடிக்கிறியா?“ என்றார் தாத்தா.

எனக்கு வேண்டாம், நீங்கள் வேண்டும் என்றால் குடித்துவிட்டுவாங்கநான் நிற்கிறேன் என்ற பாட்டிம்மா, ஓதுங்கி நிற்பதற்காக  கால்வைக்கபோன இடத்தில் ஏதோ பிளாஸ்டிக் பை குப்பை,  தாத்தா பாட்டிம்மாவை தோள்தொட்டு இழுத்து நிறுத்தினார். அதற்குள் காப்பித்தூள் வண்ண மணிபர்ஸ். அந்த புழுதிபடிந்த மணிபர்ஸை எடுத்து புழுதிபோக தட்டியபடியே யாராவது உடையவர்கள் தேடுகிறார்களா? வருகிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்த்தார் தாத்தா.

தாத்தா பார்த்தவர்களில் சிலர் பேருந்து ஆட்டோ இருச்சக்கர வாகனத்தில்  உட்கார்ந்து ஓடினார்கள்கள். நடந்தவர்கள் எங்கோ இருக்கும் வாழ்க்கையை இங்கிருந்தே பிடித்தபடி நடந்தார்கள். வீதியின் விளக்குகள் சில கமலா ஆரஞ்சு வண்ணத்தில் எரிந்தன, சில பச்சை ஆப்பில் வண்ணம், சில ஆரஞ்சு வண்ணம், சில நிலவொளி வண்ணம். வீதி வண்ணத்தின் கலவையாக இருந்தது.  தொலைத்தவன் எங்கே ஓடிக்கொண்டு இருக்கிறோனோ? இங்கே தொலைத்துவிட்டு எங்கே தேடிக்கொண்டு இருக்கிறானோ? 

தாத்தா கையில் இருந்த பர்ஸை வாங்கி பாட்டிம்மா திறந்துப்பார்த்தது. புது பர்ஸ். உள்ளே வெண்மையாக இருந்த பர்ஸில் இருந்து தோல்வாசம் அடித்தது. பாட்டிம்மா மூக்கை சுளித்துக்கொண்டது. பர்ஸ் இன்னும் பணத்திற்கு பழகவில்லை. பர்ஸின்  உள் உறையில்  நடுத்தரவயது  பெண்ணின் கறுப்பு வெள்ளை  சிறிய படம்.

பர்ஸை வாங்கிய தாத்தா, பார்த்த முகமாக இருக்கிறதே என்று  நெற்றியை சுருக்கி வலதுகையால் தடவினார்.

அட நம்ம கீழ மூங்கிலடி அலமேலுஎன்றவர். “அது போயிதான், ஒரு வருசம் ஆச்சே. அது புருஷன் சேதுபதி பர்ஸூன்னு நினைக்கிறேன்என்ற தாத்தா பர்ஸை திறந்து பணம் இருக்கா என்று பார்த்தார். எல்லாம் புது நோட்டுகள், பணத்தை தாத்தா கையில் எடுத்ததும் பணம் ஒலித்தது. புதுப்பணத்திற்கு வாசமிருந்தது.
  
பணததை எண்ணிய தாத்தாபத்தாயிரம் பணம் இருக்கு திலகாஎன்று   முடிப்பதற்குள் பாட்டிம்மாஎன்ன பஸ் ஏத்திவிட்டுட்டு நீங்க கீழ மூங்கிலடி போயி இந்த பணத்த கொடுத்துட்டுவாங்கஎன்றது.

வீதி ஓரம் பாணிபூரி விற்பவன் காத்திருந்தவர்களுக்கு பாணிப்பூரியை எடுத்து  சிறிய தட்டில் அடுக்கிக்கொண்டு இருப்பதை பார்த்தபடி இருவரும் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தார்கள்.  
 
சும்மா விடுவியா? அவன் என்ன இந்த பணத்த பார்க்காதவனா? நாலும் ஆம்பிள பிள்ள, நாலுக்கும் கல்யாணம் பண்ணி வச்சி பேரன் பேத்திய பார்த்துவிட்டான்.  மகன்களுக்கு ஆளுக்கு ஒரு வீடு கட்டிக்கொடுத்து தனிகுடித்தனம் வைத்துவிட்டான். கொத்துவேலை  பார்க்குற பெரிய மொவன் துபாயில பில்டிங் கட்டிக்கொடுக்கற காண்ராக்ட் வேலைப்பாக்கிறான். இப்ப கூட சிதம்பரம் வண்டிக்கேட்டுல கடை வீடுன்னு கட்டி அமக்கள படுத்தி இருக்கிறான். மகன் மாசத்துல லட்சகணக்குல சம்பாதிக்கிறான்.    எங்க என்ன சேதுபதி பார்த்தாலும் பிள்ளைகள் பணம் சம்பாதிப்பதையும், வீடு நிலம் மனை கடை என்று நாளுக்கு நாள் சொத்தை வாங்கி குவிப்பதைப்பற்றிதான் பேசுவான். அவன் குரல்தான் தெரியுமே, சிதம்பரத்துல பேசுனா கடலூர்ல கேட்கும். உனக்கு போனே வேண்டாம்டா என்று நான்கூட கிண்டல் செய்வேன். ” என்று தாத்தா சிரித்துக்கொண்டே மனைவியைப் பார்த்தார்.

பாட்டிம்மாவின் செல்போன் ஒலித்தது. மருமகள்தான். தெற்குவீதி பஸ்டாண்டில் பஸ்சுக்கு காத்திருப்பதாய் பாட்டிம்மா சொல்லிவிட்டு போனை நிறுத்தி பையில் வைத்துக்கொண்டது. மருமகள் அழைப்பு பாட்டிம்மா முகத்தில் நிலவொளி எழச்செய்தது.
     
அதற்காக. ஊரான்வீட்டு பணத்தை நீங்களே வைத்துக்கொள்வீர்களா?” என்று பாட்டிம்மா முறைத்தது. முகத்தில் நீர் கிழியும் கோபம். கோபம் தோன்றியபோதே மறைந்துகொண்டும் வந்தது. தாத்தா முகம் கூம்பி பின் மலர்ந்தது.

சரி சரி. நம்ம பெரிய பயல்கிட்ட கொடுத்தா, நாளை காலை பைக்கிலபோயி கொடுத்துட்டு வந்துடுவான். நான் பேத்திக்கு பால்கோவா வாங்கியாறேன். நீ இங்கேயே உட்காருஎன்று பஸ்டாண்ட் சிமெண்ட் கட்டையை தனது துண்டால் விசிறி பாட்டிம்மாவை உட்கார வைத்து விட்டு, அது உட்கார்ந்து இருக்கும் அழகை கண்களில் தேக்கியபடி  உனக்கு என்ன வேண்டும்என்றார்.

மருகளுக்கு குண்டுமல்லி பூ பிடிக்கும், வாய்விட்டு கேட்க மாட்டா அதுல ஐந்துமொழம் வாங்கிக்குங்க.  குலோப்ஜாமுன் விரும்பி சாப்பிடுவாள் அதுல கொஞ்சம் தாராளமா வாங்கியாங்கஎன்ற பாட்டி தன்  தலையில் இருந்து மடியில் விழுந்த மல்லிகை பூவை தூக்கி முகத்திற்கு முன் வைத்துப்பார்த்தது.

பாட்டிம்மாக்கையில் இருந்த மல்லிகைப்பூவை புடுங்கி முகர்ந்தபடிஉனக்கு என்ன வேண்டும்?” என்று தாத்தா கேட்பதே சிரிப்பதுபோல் இருந்தது.

எல்லாம் நமக்குதாங்க, உங்களுக்கு பிடித்தத வாங்கிவாங்க. மகன் மருமகள், பேரன் பேத்தி எல்லாம் நாம ரெண்டுபேரும்தானேஎன்று சொல்லிய படி சிரித்த பாட்டிம்மாவின் கன்னத்தில் குழிவிழுந்தது. வயதின் ஏற்றத்தால் அது கொஞ்சம் நீண்டு வளைந்து வயதை நீட்டிக்காட்டியது.  தாத்தா கனிவுடன் பார்த்தார்.  பாட்டிம்மாவின்  காதோரம் மொய்த்த கொசுவை துண்டால் விசிறி துரத்திவிட்டு இடது தோளில் முன்பின் கிடந்த துண்டை இழுத்து  இடது வலது தோளில்   மாலையாக போட்டு நடந்தார். எட்டுமுழ பட்டு வேட்டியின் தங்கம் மின்னும் பெரியகரை அப்போது ஒரு கம்பீரத்தை கொடுத்தது. அவர் நடக்கும் அழகையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தது பாட்டிம்மா.
 
மனைவியுடன் ஸ்கூட்டியில் போகும்  மெக்கானிக்கிடமிருந்து டீசல்வாசம் வந்தது. அவனுடைய காக்கிச்சட்டை ஆயிலில் நினைத்து தி்ட்டுத்திட்டாய் ஈரமாக இருந்தது. பாட்டிம்மா அவன் மனைவி ஒதுங்கி தள்ளி உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவர்களுடனே பார்வையை அனுப்பி திரும்பி அழைத்துக்கொண்டது. அவள் ஐந்துமாத வயிற்றை ஒரு கையால் பிடித்திருந்தாள். தலையில் வைத்திருந்தபூவோடு வேப்பிலைக்கீற்றொன்றை சொருகியிருந்தாள்.

பேண்ட் சர்ட்டில் நடந்துபோவோரை பார்த்துவிட்டு மீண்டும் தனது கணவன் நடக்கும் அழகைப்பார்த்தது பாட்டிம்மாஎன்ன பேண்ட் போட்டால் என்ன?  நடக்கும்போது வேட்டியில் ஆணுக்கு ஒரு கம்பீர அழகு வரத்தான் செய்கிறதுஎன்று  தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

தெற்குரதவீதியில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்திருந்தபடியே எதிரே மரவல்லிகிழங்கு வறுவல் விற்கும் தள்ளுவண்டியை பார்த்துக்கொண்டு இருந்தது பாட்டிம்மா. அருகருகே தள்ளுவண்டியில் ஒரு பழக்கடையும். ஒரு வளையைல் மணி பொம்மைகள் விற்கும்கடையும் இருந்தது. மரவல்லிக்கிழங்கின் வறுவல் மணம் மண்ணெண்ணெய் தீச்சுடர் வாசமும் இங்குவரை வந்து சென்றது.
  
பூ பொட்டலத்துடன் சண்முகவிலாஸ் இனிப்பையும்   வாங்கி வந்த தாத்தா. “96 படம் ஓடுது. நாளைக்கு வந்து பார்ப்போமா? பேரன் பார்த்துவிட்டு வந்து நல்ல படம் என்றான்என்றார் கண்கள் மின்ன.

சண்முக விலாஸ் இனிப்பின் நெய்வாசமும், குண்டுமல்லி பூவாசமும் பாட்டியின் முகத்தை பிரகாசிக்க வைத்தது. பாட்டிம்மா உட்கார்ந்திருந்த படியே நிமிர்ந்து தாத்தாவின் கண்களைப்பார்த்தபடியே   மைனருக்கு, காலேஜ் பையன்னு நினைப்பா? அது  சின்ன வயசுல பிரிந்த காதலனும் காதலியும்  காதலியின் கல்யாணத்திற்கு பிறகு சந்திச்சிகிற படமாமில்ல, மருமக சொன்னா. உங்களுக்கு யாரு பழைய காதலி? அந்த நினைப்பு இன்னும் இருக்கா?” என்று பாட்டி  சிரித்துக்கொண்டே தாத்தாவின் கையில் இருந்த இனிப்பையும் பூவையும் வாங்கியபடியே அவர் கையை தடவியது. தாத்தாவின் கையில் இருந்த பால்கோவா நெய் பாட்டிம்மாவின் உள்ளங்கையில் ஒட்டி பிசுபிசுத்து மணத்தது.  

பாட்டியின் பக்கத்தில் இருந்த சிமெண்ட் கட்டையை துண்டால் விசிறிவிட்டு உட்கார்ந்த தாத்தா. “நீதான் என் காதலி!   நமக்கும் பழைய கால  நினைப்பு இருக்குல்ல.  அது என்னமோ திலகா. வயது கூடக்கூடத்தான் மனசு இளமையா ஆவுது. இன்னும் மனசு உன்ன பார்த்த அந்த நாட்களில்தான் இருக்கு. மாமாமட்டும் அன்னைக்கு உன்ன கொடுக்கல,   தூக்கிட்டு வந்து குடும்பம் நடத்திருப்பேன்பழைய நினைவில் தாத்தாவின் முகத்தில் ஒரு இறுக்கம் எழுந்து கற்சிலை விழிப்பை ஏற்படுத்தியது.

பாட்டி தாத்தாவின் பேச்சை விரும்பினாலும், பக்கத்தில் உள்ளவர்கள் பார்ப்பதை பார்த்ததும் பேச்சை மாற்றவிரும்பியாரு, தருமதுரையில நடித்தானே அந்த பையனா? நல்லாத்தான் நடிக்கிறான். ஆனால், எல்லா படத்திலேயும் ஒரே மாதரி தலைய குனிந்துகிட்டு. கழுத்த சாச்சிகிட்டு பேசுறான். நடிக்கனும்ன்னா அந்த பாத்திரத்திற்கு ஏத்தமாதரியே மாறிடனும்என்றபடியே முந்தானையை விசிறிபோல ஆக்கி தனக்கு விசுறுவதுபோல தாத்தாவிற்கும் விசிறியது பாட்டிம்மா. “ஊரெல்லாம் காங்கிரட் கட்டிடம், புழுங்காமல் என்ன செய்யும். இராத்திரி மாதரியா இருக்கு? காத்தே இல்ல, காத்து இருந்தாலும் காத்தில் உயிரில்லஎன்ற பாட்டிம்மாவின் மூச்சு ஏக்கமாக மாறியது.

தாய்ப்பால் மணம் தொட திரும்பிய பாட்டிம்மா பின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் முந்தானையை விளக்கி குழந்தைக்கு பால் கொடுத்ததைப் பார்த்து சிரித்தடி. பிள்ளையின் கடைவாயில் பால் ஒழுகியபாலை  அந்த பெண்ணின் முந்தானையை இழுத்து   துடைத்துவிட்டு, குழந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு குழந்தையின் முகத்தையும் தாயின் மாரையும் முந்தானையால் மூடிவிட்டது.  குழந்தையிடமிருந்து ஜான்சனன் ஜான்சன் பேபி பவுடர் வாசம் பாட்டிம்மாவின் கையிலும் ஓட்டிக்கொண்டது.

கண்ணு பட்டுடபோவுது, பிள்ளைக்கு மூச்சு முட்டாம பாலை பாத்துக்கொடு’’  என்ற பாட்டிம்மாவை குழந்தையின் தாய்  பார்த்து வெட்கத்தோடு குழந்தைபோல் சிரித்தாள்.  அவள் மேல் உதட்டில் இருந்த மிளகு அளவு மச்சம் அவள் முகத்தை மீண்டும் பார்க்க தூண்டியது.

திலகா!, நடிப்புன்னா சிவாஜிகணேசன்தான், ஓவர் ஆக்டிங்குன்னு இந்த காலத்து பயலுக சொல்லுவாங்க. அவருடைய கண்ணின் மணிகூட நடிக்கும். உயர்ந்த மனிதன் படத்தில் காதலியை இழந்துவிட்டு, பணக்காரமனைவியுடன் உயர்ந்த மனிதனாக நடிக்கும் பாத்திரம். அந்த கண்ணுக்குள் காதலிய இழந்த சோகமும், பணக்கார மனைவிக்காக பந்தாவும் பணக்காரத்தனமும் சேர்ந்து நின்று அவரை வேறு ஒரு மனிதனாக காட்டும். அப்பப்பா மனுசன் நடிப்பதற்காகவே பிறந்த தெய்வபிறவி. தன் மகன் என்று தெரியாமல் தன்வீட்டில் வேலையாளாக  வைத்திருக்கும் தன்மகனை திருடன் என்று  எல்லோரும் சொல்லும்போது, தான் நம்பியவன் ஏமாற்றிவிட்டானே என்ற தன் நம்பிக்கை  தொலைந்த சோகத்தில் ஒரு பார்வை, ஒரு பாவனை காட்டுவார், அதெல்லாம் நடித்து உருவாக்க முடியாது. தானா வரனும் திலகா!.” தாத்தா சிவாஜிகணேசன் நடிப்பு உலகத்திற்குள் ஆழ்ந்துபோனார்.  பன்னீர்புகையிலை மணக்க மணக்க வெற்றிலைப்போட்டுக்கொண்டு வந்த பெரியவர்  திரும்பி கிழக்கே இருந்து பஸ்வருகிறதா என்று பார்த்தார். 

போதும் போதும் பஸ்வருகிறது வாங்க போகலாம்.  வரும் ஞாயிற்குகிழமை  பிள்ளைகளோட வந்து படம் பார்க்கலாம்என்று எழுந்த பாட்டிம்மா தாத்தாவின் கையைபிடித்து இழுத்துக்கொண்டு நடந்தது.

எதையோ நினைத்துக்கொண்டு நின்ற பாட்டிம்மாஏனோ மனம் இந்த பர்ஸையும் பணத்தையும் அலமேலு புருஷன்கிட்ட இன்னைக்கே கொடுத்துட்டு போன்னு சொல்றமாதரி இருக்குதுங்க. ரெண்டுபேரும் கீழ மூங்கிலடிபோயி கொடுத்துட்டு அப்படியே ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு போயிடுவோம். வெள்ளாத்த தாண்டினா நம்ம ஊருதானே

நாளைக்கு கொடுத்துடுலாம் திலகா

எவ்வளவு பணம் இருந்தால் என்ன? தொலைந்த பணத்தில் மனம் சிக்கிபடும்பாடு, சொல்லி மாளாது. என்னத்துக்காக வைத்திருந்த பணமோ?  மண்டபம் பஸ் வருதான்னு பாருங்கள்என்ற பாட்டிம்மா மீண்டும் வந்து உட்கார்ந்துக்கொண்டு. கைப்பையை திறந்து போனை எடுத்து   மருமகளுக்கு கீழ மூங்கிலடி போயிட்டு வருகிறேன் என்ற செய்தியை சொன்னது. பாட்டியின் கைப்பையில் இருந்து ரோஜா இதழ்மணம் மீண்டும் வெளிவந்து பரவியது. 

பணத்தை கொடுக்கவேண்டாமுன்னு நினைக்கில திலகா, அந்த ஆள  பார்த்தா புள்ளைகள் புராணம் பாடியே கொன்னுடுவாறு. அதான். அதும் பெரிய பையன் துபாய் போனதிலிருந்து, கையில காசு புரள ஆரம்பித்ததும். ரொம்ப பேசுறான்

மனுசன்னா அப்படிதாங்க.  எல்லா மனுசனுக்கும் நாம பெருசுங்கற நினைப்பு இருக்கத்தானே செய்யுதுபாட்டிம்மா கொஞ்சியபடி தாத்தாவின் கைவிரலை நீவியபடி . அதில்   இருந்த காய்ப்புகளை தன்விரல்களால் நிமிண்டியது.
 
போன மாசம் பரங்கிப்பேட்டை சந்தையில பார்த்தேன் திலகா. பார்த்துட்டு பார்க்காத மாதரி போகக்கூடாதேன்னு டீ சாப்பிட கூப்பிட்டேன். மீண்டும் மகன் புரணம். எத்தனை தரம்தான் கேக்குறது. பேர பிள்ளைகள் சேலத்திற்கு ஹாஸ்டலில் படிக்கபோவதால மருமகள்  வண்டிகேட்டு வீட்டுக்குப்போயிடுச்சாம். மகன் இந்த வீட்ட பூட்டிட்டு அங்க போயி இருங்குறான்.  பெரிய மருமகள் தங்கத்தில் கொளுசு வாங்கி இருக்காம். மருமகள் யாரும் இவர் பேச்சை கேட்பதில்லை என்று ஊரில பேச்சு  என்று கூறிவிட்டு. தூரத்தில் வரும் பஸ் கீழமூங்கிலடி போகுமா என்று கையை தூக்கி நெற்றிக்கு மேலே வைத்துப்பார்த்தார். விளக்குவெளிச்சத்தில் கண்கள் கூசியது.

கடலூர் பஸ்வந்து நின்று ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றது. பின்னலேயே சேலம் பஸ் வந்து நின்றது. குல்பி ஐஸ்  விற்பவன் அருகில் வந்து நின்று மணியடித்துக்கொண்டு இருந்தான்.
 
அலமேலும் அவரும் ஒற்றை காணியை வைத்துக்கொண்டு பட்டப்பாட்டை நினைத்தால் கண்ணுல தண்ணி வந்துரும். இந்த நாலு புள்ளைகளை வளர்க்க அலமேலு கொஞ்சம்பாடா பட்டா. அவ பட்ட பாட்டுக்கு ஆண்டவன் கண்ணதொறந்துட்டான். ஆத்தாலதான் விட்டுட்டானுங்க அப்பனையாவது நல்லா பார்த்துக்கிட்டா சரிதான். அலமேலு அந்த பயலுகள வைத்துல வைச்சிகிட்டு காய்கறிகூடைய தலையில தூக்கிகிட்டு நடந்தத நினைச்சா கண்ணுல தண்ணிவந்துவிடும்  என்று பாட்டி  கண்களை துடைத்துக்கொண்டது.

எத்தனை கஷ்டப்பட்டு அது குடும்பத்தை காப்பாத்தியது. வாழ்க்கை வந்தபோது ஏன் உட்கார்ந்துசாப்பிட கொடுத்துவைக்கல. வாழ்க்கையின்னா அப்படித்தான்போல. அதுக்கு வயிலுத்துல கட்டி வந்துடுச்சின்னு அவரும் பார்க்காத டாக்டரில்ல. ஒரு கோயில் குளத்த விட்டதில்ல. அது அவருக்கு பொண்டாட்டி இல்ல தெய்வம். அது செத்த அன்னைக்கு மனுசன் அழுத பாத்து பதறிவிட்டேன்தாத்தாவின் கீழ் இமைகளில் நீர்கோடு துடைத்துக்கொண்டார்.

தாத்தா கொஞ்சநேரம் எதிர்திசையைப் பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார்.
அந்த மனநிலையின் வெக்கையை தணிக்க நினைத்த தாத்தாஅம்மாபுரத்தில் என் கூட்டாளி கல்யாணசுந்தரம் இருந்தானேஎன்று ஆரம்பித்தார்.

யாரு பால்கார கல்யாணமா?”

ஆமாம் அவன்தான். அம்பிகா நடித்த படத்த பார்த்தா அன்னைக்கு ராத்திரி பொண்டாட்டிய போட்டு அடித்து இருப்பான். பாவம், மாமியார்தான் தவி்ட்டு ஒத்தடம் கொடுக்கும். ஒருநாள் அது கிடந்த கிடைய பார்த்துட்டு அடிக்கபோயிட்டேன்

ஏன்

அத இப்ப சொல்ல முடியாது, ராத்திரி சொல்றேன்என்று தாத்தா கண்சிமிட்டினார்.

நீங்களும் உங்க கூட்டாளியும். நீங்கதான் மெச்சிக்கணும், இதுமாதரி கூட்டிளியெல்லாம் உங்களுக்குதான் கிடைக்கும். ஆளபாருஎன்று பாட்டி உதட்டை சுழித்துக்காட்டிவிட்டு. “எனக்குமட்டும் இது தெரிந்து இருந்தால் எம்ஜியார் படத்துக்கு கூட்டிட்டுபோ இல்லாட்டி பட்டினி போட்டுறுவேன்னு சொல்ல  வச்சிருப்பேன். அம்பிகாவாம் அம்பிகா.  விலக்கமாத்து கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கேக்குதா?”

தாத்தா கடைவா பல்தெறியிற மாதரி அண்ணாந்துப்பார்த்து பஸ்டாப் என்பதையும் மறந்து பகபகவென்று சிரித்தார். பாதிநிலா வானம்  நட்சத்திரங்களால் மின்னயது.

பாட்டி சுதாரித்துக்கொண்டு. “அலமேலுவோட மற்ற புள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்கஎன்று தாத்தாவை பஸ்டாப்புக்கு இறங்கிவரவைத்தது.

ஒரு பையனுக்கு சொந்த தங்கச்சி மகள கட்டி வைத்திருகிறார். எப்ப சந்தைக்கு வந்தாலும் மருமக பேர புள்ளைங்களுக்கு என்று  மூட்டைதான் கட்டி தூக்கிபோவார். பொண்டாட்டி இல்லங்கற கவலை இருக்குமி்ல்ல. ஆயிரம் அன்பு இருந்தாலும் அம்மாவின் அன்புபோல வருமா? ஆயிரம் உறவு இருந்தாலும், மனைவின் உறவாகுமா? மனுசன் இளைத்துதான் போய்விட்டார். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காததுபோல அந்த பேச்சு மட்டும் இன்னும் வெங்கலமணிதான்  என்று பாட்டிம்மாவின் மடியில் கிடந்த அதன் கையை மெல்ல தடவினார்.

பாட்டிம்மா கையை மடியில் இருந்து கையை இழுத்துக்கொண்டு அலமேலு புருஷன் இளைத்துவிட்டார் என்ற சொல்லால் துணுக்குற்ற   தாத்தாவை நிமிர்ந்து கூர்மையாகப்பார்த்துவிட்டு தலையைஇல்லைஎன்பதுபோல ஆட்டிக்கொண்டது.

கடலூர் பஸ்வந்து நின்றது. சென்னை பஸ்நிற்பதுபோல வந்து யாரும் ஓடிவராததால் நிற்காமலே போய்விட்டது. ஆரஞ்சி கலர் சுடிதாரில் காலேஜ் பெண்ணொருத்தி ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்போன் பேசியடிபோனாள்.

நீங்க போயி எதுத்தாபல இருக்கிற பாண்டியன்  மெஸ்சுல ஒரு சிக்கன் பிரியானி பார்சல் வாங்கி வாங்கஎன்று தாத்தாவை அவசரப்படுத்தியது பாட்டிம்மா.  பாட்டியை தாத்தா வித்தியாசமாக பார்த்தார். பாட்டி ஹோட்டலில் சாப்பிடாது. பாட்டியால் தாத்தாவும் ஹோட்டலில் சாப்பிடுவதையே விட்டுவிட்டார்.

 ஏன்?”

போயி வாங்கிட்டு வாங்க. ஒத்தவீட்டு கனகம், பிள்ளதாச்சி, ஏதாவது வாயிக்கு ருசியா  தின்னா தேவலம்போல இருக்கு என்று புருஷன்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தத வரும்போது  கேட்டேன். குடிகார பைய என்னத்த வாங்கிட்டு வரபோரான்.  பஸ்சு வந்திடபோகுதுஎன்று பாட்டிம்மா தாத்தாவை தள்ளியது.

தாத்தா எதுவும் சொல்லாமல் மடமடவென்று  நடந்து பிரியாணி கடைக்கு சென்றார். 
சோன்பப்புடி வாசம் வர பாட்டிம்மா திரும்பிப்பார்த்தது.  கண்ணாடி குடுவையை திறந்து சோன்பப்புடியை அள்ளி காகித சுருளில் மடித்துக்கொண்டு இருந்தான் தள்ளுவண்டிக் காரன்.
பார்சலுடன் வந்து தாத்தா நிற்கவும் கீழமூங்கிலடி மினி பஸ்வரவும் சரியாக இருந்தது. தாத்தா கையில் இரண்டு பிரியாணி பார்சல் பொட்டலங்கள்.

பாட்டிம்மா பார்சலை வாங்கியபடியேசோற்றை அடி பிடிக்க விட்டுட்டான்என்றது. பாட்டிம்மா.
    
பஸ் கீழமூங்கிலடியில் அலமேலு வீட்டுக்கு முன்னாலேயே நின்றது. வீதியின் இரண்டு பக்கமும் அலமேலு பிள்ளைகள் வீடுதான். ஏதோ ஒரு வீட்டின் கறிகுழம்பு வாசம் நாசியைவிசாரித்து. நாக்கை ஊறவைத்தது.

பணத்தை நாளைக்கு வந்து கொடுத்துக்கலாம் வா வீட்டுக்கு போயிடுவோம்என்றார் தாத்தா.

நாளைக்கு நாளைக்கு என்கிறது உங்க குடும்ப மந்திரமாஎன்று முறைத்த  பாட்டிம்மா எட்டி நடக்க தொடங்கியது.

பாட்டிம்மா கையை தாவிப்பிடித்த தாத்தா பாட்டிம்மாவின் கோபத்தை தணிக்கஇதுதான் சின்ன மகன் வீடு, கதவு ஜன்னல் எல்லாம் தேக்குஎன்றார்.  வீட்டை திரும்பி பார்த்த பாட்டிம்மாபெரிய வீடுதான். இந்த வீட்டுக்காரி மத்திமீனு வறுவலும், ரசமும் வைத்திருக்கிறாள்என்றது. பாட்டிம்மாவின் முகத்தில் கோபம் இருந்த இடமே தெரியவில்லை.

நல்ல மூக்கு உனக்குஎன்று தாத்தா பாட்டிம்மாவின் நுனிமூக்கை ஆள்காட்டி விரலால் தட்டினார். பாட்டிம்மா தலையை சினுங்களாக ஆட்டியது. பாட்டிம்மாவின் வைரதோடு, வைரமூக்குத்தியில் இருந்து ஒளி பூக்கள்  உதிர்ந்தது. 

இது மூன்றாவது மகன் வீடு. இவனுக்குதான் தங்கச்சி மகளை கட்டிவைத்திருக்கிறார். அதோ அதுதான் அவர் தங்கச்சிதாத்தா சுட்டிக்காட்டிய வீட்டில்  தங்கச்சி வரந்தாவில்  உட்கார்ந்து தட்டை மடியில் வைத்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அங்கிருந்துதான் கறிகுழம்பு வாசம் வருகிறது.“கறிக்குழம்புக்கு இஞ்சி அதிகமாக அறைத்துவிட்டு இருக்கிறாள். ஒரே இஞ்சி வாசமாக இருக்கு, அப்பதான் கறிவேகுன்னு நினைச்சிருப்பா, ஆனா குழம்போட சுவையை அது குறைத்துவிடும். கறியும் இஞ்சிவாசம் அடிக்க ஆரம்பித்துவிடும்என்றது பாட்டிம்மா. தாத்தா மீண்டும் பாட்டியின் மூக்கை தட்டப்பார்த்து வலிக்காமல் கிள்ளிவிட்டார். 

இதுதான் இரண்டாவது மகன் வீடு. டூரிஸ்ட்வேன் வாங்கி வச்சி ஓட்டி சம்பாதிக்கிறான்என்று இடது புறம் சுட்டிகாட்டினார். இந்த மருமகள் புதுசத்திரம் ஸ்டேசனில் போலிஸ். வரந்தாவில் உட்கார்ந்திருந்த குழந்தைகள் சிக்கன் சால்னாவில் ஹோட்டல் பரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். காற்றில் விஸ்கிவாடை. பாட்டிம்மா முந்தானையால் மூக்கை மூடிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டது. “எப்படிதான் குடிக்கிறனுவோளோ? எதுக்குதான் குடிக்கிறானுவோளோ?” என்று பாட்டி சொன்னபோதுதான் தாத்தாவின் மூக்கிற்கு டாஸ்மாக் வாடை வந்து தொட்டது.

தாத்தா அதையே சாக்காக எடுத்துக்கொண்டுவா திலகா போய்விடலாம். நாளைக்கு பையன்கிட்ட கொடுத்துவிடுவோம்என்றார்.

பாட்டிம்மா நின்று தாத்தாவை துளைத்துவிடுவதுபோல் பார்த்தது.

சரி சரிஎன்ற தாத்தா.   அதோ அதுதான் பெரியமகன் வீடு. இதுதான் முதலில் கட்டியவீடு. இதில்தான் அலுமேலும் அவரும் வாழ்ந்தார்கள்.  அந்த வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கொட்டைகையில் டாக்டர் நின்றது.  பக்கத்தில் மாடுகள் நிற்பது நிழலாக தெரிந்தது. கன்றுக்குட்டிக்காக தாய்பசு மூச்சிறைத்து மெல்லி ஓசை எழுப்பியது.

வீடு பூட்டி இருக்கேஎன்று பாட்டி முடிப்பதற்குள் வரந்தாவில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது. ஜீரோ வாட் பச்சை விளக்கு மட்டும் போர்ட்டிகோவில் தனித்து எரிந்தது.
 
சேதுபதிஎன்று தாத்தா அழைத்ததும். “யாரதுஎன்று சுரத்தி இல்லாமல் புரண்ட சேதுபதி பின்பு மெதுவாக எழுந்து அவிந்த வேட்டியை இழுத்து கட்டிக்கொண்டே தளர்ந்து நடந்து வந்தவர் பாட்டியை பார்த்ததும்வாங்கம்மா.வாங்கம்மாஎன்று கைபதறினார்.

இது சேதுபதி குரலாதாத்தாவால் நம்பமுடியவில்லை. வெங்கலமணியில் அலுமினிய பாத்திர ஓசையா?

வராதவங்க வந்திருக்கிங்க. உட்கார வைக்ககூட இடமில்லையே. அவளோட எல்லாம் போச்சிஎன்றவர் கை அவரையும் அறியாமல் குவிந்தது. கண்களின் ஓரத்தில் விளக்கு ஒளி முத்தாக மின்னியது.

அந்த சின்ன வரந்தாவின் அடுக்கிய மூட்டைகளின் இடையில்தான் சேதுபதி படுத்திருந்தார் என்பதை புரிந்துக்கொண்டார் தாத்தா. சாக்குநெடி, புழுங்கல்நெல்மணம், தவிட்டு மணத்தோடு தவிட்டுபூச்சி வாசம். எலி புழுக்கை நாற்றம். வேப்பம் புண்ணாக்கு சிக்கு நாற்றம். பாட்டிம்மாவிற்கு நெடியேறியது. 

அதிகநேரம் அங்கு நின்று அவரை சங்கடப்படுத்த விரும்பாவில்லை தாத்தா.
சிதம்பரம் போனப்ப, ஒரு பர்ஸ் கீழ கிடந்து எடுத்தேன். பார்த்தா! அதில் உங்க மனைவியோட போட்டோ. உங்க பர்ஸுன்னு தெரிந்தது அத கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தோம். நேரம் ஆகிவிட்டது, அப்புறம் ஒரு நாளைக்கு பகல்ல வரோம்என்று சொல்லியபடி தாத்தா பர்ஸை அவர் கையில் தினித்தார். அதை வாங்ககூட மனம் இல்லாமல் பேச்சு எழாமல் சேதுபதி நின்றார்.  அவர் கண்களில் ஈரம் தெரியாமல் இருக்க குனிந்துக்கொண்டார்.

தாத்தாவுடன் திரும்பி நடக்க தொடங்கிய பாட்டிம்மா  கால்கள் தயங்க நின்றதுஇந்த வீட்டில் கஞ்சிவாசம்கூட வரவில்லையேஎன்ற நினைப்பு பாட்டிம்மாவிற்குள் எழுந்ததும் மனம் பதைத்தது. கைகள் நடுங்கியதுசேதுபதியை திரும்பிப் பார்த்தது. அவர் கண்களில் கண்ணீர் துளி. பசி களைப்பு.
   
கையில் வைத்திருந்த பிரியாணி பார்சல் இரண்டையும்  பாட்டிம்மா அவர் கையில் வைத்ததும் அவசரமாக வாங்கி நெஞ்சோடு அனைத்துக்கொண்டார்.

 அம்மா!” என்றசொல் அவரின் ஆழத்தில் இருந்து  எழுந்து வந்து அவர் உதட்டில் உட்கார்ந்து கொண்டது. வெளிவரவில்லை. உதடு கோணி துடித்தது. “அம்மா!”  என்ற அவரின் அந்த சொல்லுக்கு ஓசையில்லை ஆனால்  பாட்டிம்மாவிற்குள் அந்த சொல் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவர் கண்ணில் மின்னிய நீர்த்துளி பாட்டியின் கையில் பட்டு விளக்கின் ஒளிசிதறலாக  மாறியது.

வீடு வரும்வரை தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளவி்ல்லை ஆனால்  வீடுவரும்வரை தாத்தாவின் கையைபிடித்த படியே இருந்தது பாட்டிம்மா.
 -----------------------------
ராமராஜன் மாணிக்கவேல்
அக்டோபர்-16-2019       


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா

No comments:

Post a Comment