Friday, November 29, 2019

நாஞ்சில் நாடன்-இடலாக்குடி ராசா சிறுகதை-வாசிப்பு அனுபவம்.





ஓம் முருகன் துணை




நாஞ்சில் நாடன்-இடலாக்குடி ராசா சிறுகதை-வாசிப்பு அனுபவம்.

நகைச்சுவையும் சிரிப்பை உண்டாக்கும், கேலியும் சிரிப்பை உண்டாக்கும். நகைச்சுவை நினைத்து நினைத்து புன்னகைக்க வைக்கும் சிந்தனையை கொடுக்கும். கேலி சிரிக்கவைத்தாலும் நினைக்கும்போது தர்மசங்கடத்தை அல்லது மனகாயத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துவிடும். 

நகைக்சுவை நான் பெரியவன் என்ற அகங்காரத்தோடு வருவதில்லை. கேலி நான் பெரியவன் என்ற அகங்காரத்தோடு வந்து ஆட்டிவிட்டுப்போகும். எனவே கேலியை நகைச்சுவை என்று நினைத்துக்கொள்ளும் அறியாமையை விடவேண்டும்.

பாண்டவர்கள் இந்திரபிரதஸ்தத்தை உருவாக்கியபோது, இந்திரபிரதஸ்தத்தில் துரியோதனைப்பார்த்து திரௌபதி சிரித்தது நகைச்சுவைக்காக இல்லை. கேலிக்காக, அதன் விளைவு எத்தனை கொடுமைகளை உண்டாக்கியது.

வலம்புரிஜான் சிறுவனாக இருந்தபோது அவர் கிராமத்தில் பணக்காரர் வீட்டிற்கு வரும் ஆங்கில நாளேடு படிக்க சென்றபோது  படிப்பதற்கு மறுக்கப்பட்டு, கேலியாக வெளியே அனுப்பப்படுகிறார். பின்னாநாளில் ஆங்கிலத்தில் பெரும்புலமைப்பெற்று பெரும் பேச்சாளராக மேடையில் வலம்புரிஜான் தோன்றுகின்றார். அவர் பேச்சை கேட்க முன்வரிசையில் அந்த பணக்கார வீட்டுக்காரர் அமர்ந்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தும் வலம்புரிஜான். சொல்கிறார் “அம்பு எய்தவன் மறந்துவிடுவான், காயம்பட்டவன் மறப்பதில்லை”

பாலபருவத்தில் ஸ்ரீராமன் கூனியின் கூன்முதுகில் களிமண் உருண்டையால் அடித்து விளையாடுகிறான். அது ஒரு கேலி. அதற்குதான் கூனி சமயம்பார்த்து ஸ்ரீமன்ராமச்சந்திபெருமானை வணத்திற்கு அனுப்புகிறாள். கேலி திரும்பிவர காத்திருக்கும் அம்பு. 

கேலி செய்பவரை கேலிக்கு உட்படுபவர் பழிவாங்கிவிடுவார் என்பது நடமுறை வாழ்க்கை. எனவே கேலி செய்வதை நிறுத்தவேண்டும் என்பது பொதுநியதி. ஆனால் கேலி செய்தவரை கேலிக்கு உட்பட்டவர் பழிவாங்காமல் விட்டால் வாழ்க்கை துன்புறுவதில்லை மாறாக மனம் துன்புறுகிறது.

வாழ்க்கையை கண்ணால் பார்க்கிறோம், மனதை உணர்கின்றோம். உணர்வதை அறிய அகக்கண் வேண்டும்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு-என்கிறார் திருவள்ளுவர்.

கேலி நாவினால் சுட்டவடுவாகும். இதனால் பாதிக்கப்பட்டது என்ன என்பதை எளிதில் அறியமுடியாது. பாதிப்புள்ளானவர்கள் நெஞ்சம்படும்பாட்டை அறம் அறிந்து திரும்பிவந்து தாக்கும் அந்த தாக்கத்தை தாங்கமுடியது. எனவே கேலி செய்தவர்கள் அதைஅறியும்போது உலகமே புரண்டு தங்கள்மீது விழுந்ததைபோல் இறக்கிவைக்கமுடியாமல் தவிக்கிறார்கள்.

நாஞ்சில்நாடன் எழுதிய சிறுகதை இடலாக்குடி ராசா. கேலியில் விழும் ஒரு உயிரின் செயலால் கேலிசெய்தவர்கள் அடையும் மனசுமையை நம்மீது இறக்கிவைக்கிறது.

பிச்சைகேட்பவர்களைப் பார்த்து கையும் காலும் நன்றாகத்தானே இருக்கிறது, உழைத்து சாப்பிடுங்கள் என்பார்கள். நாற்பது ஐம்பது வயதை எட்டியவன் இடலாக்குடி ராசா. கையும் காலும் நன்றாக இருந்தும், வாட்ட சாட்டமாக இருந்தும் உழைத்து சாப்பிடும் நிலையை அடையமுடியாமல் ஆகிவிடுகின்றான்.  பசிக்கின்ற நேரத்தில் யாருடைய வீட்டிற்காவது வந்து சாப்பாடு வாங்கி சாப்பிடுவான். பெண்கள் எல்லாம் அவனுக்கு சாப்பாடு போட பிறந்த அன்னையும் அக்காவும்தான். அவன் மனம் தாய்மையில் குழைந்து நின்றுவிடுகிறது. யார் வீட்டில் அவன் சாப்பிட்டாலும், ஊரில் உள்ள   அக்கா அம்மாக்கள் அவன் சாப்பிடும் இடத்திற்கே வந்து அன்னம் பாலிப்பார்கள்.  

ஒரு நாள் கல்யாணவீட்டில் கல்யாணசாப்பாடு சாப்பிட போகும் இடலாக்குடி ராசாவை விருந்துபரிமாரும் இளவட்ட பசங்கள் அவனுக்கு மட்டும் சாப்பாடு போடாமல் மற்றவர்களுக்கு மட்டும் சாப்பாடு போடுகின்றார்கள். இடலாக்குடி ராசா சாப்பாடு கேட்டும் பரிகாசம் தொடர்கின்றது. இடலாக்குடி ராசா கண்கள் நிறைந்துவிடுகிறது. அதற்காகவே காத்திருந்ததுபோல் இளவட்டபசங்கள் கேலியில் சிரிக்கிறார்கள். இடலாக்குடி ராசா பந்தியைவிட்டு எழுந்து சாப்பிடாமல் சென்றுவிடுகின்றான். அதன் பின்பு இலவட்ட பசங்களால் சாப்பிடமுடியவில்லை.

இந்த இடலாக்குடி ராசா கதை இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தின் முதல்காட்சியாக அமைந்து உள்ளது.

இந்தகதையில் கேலிதான் நடக்கிறது. இடலகுடி ராசாவிற்கு உணவு மறுக்கப்படவி்ல்லை. உணவை வைத்து அங்கு ஒரு பெரும்கேலி நடக்கிறது. கேலியின் முடிவு கேலி செய்தவனையும், கேலிக்கு உட்பட்டவனையும் வேதனையில் கொண்டு தள்ளிவிடுகின்றது.

கேலிக்கு உட்பட்டவன் வேதனையில் இருந்து தப்பிவிடுவான். கேலி செய்தவன் தப்பவே முடியாது என்பதாக உள்ளது கதை.

நகைச்சுவை செய்யுங்கள். கேலி செய்யாதீர்கள். நகைச்சுவை மட்டும்தான் வலி நிவாரணி. 

ராமராஜன் மாணிக்கவேல்
நவம்பர் 30, 2019.




No comments:

Post a Comment