சிவபூஜை (சிறுகதை)
ராமராஜன்மாணிக்கவேல்
டாக்டர் வந்தியதேவனின் விழிகளில்
தேங்கிய கண்ணீர் மின்விளக்கின் ஒளியில் குருதித்துளிபோல் திரண்டு மின்னியது.
செல்போனில் பேசும் அண்ணனுக்கு
பதில் சொல்லமுடியாமல் தொண்டை அடைக்க “ம்..ம்” என்றபோது அவர் உடல் வேதனையில் அதிர்ந்தது.
போன்பேசி முடித்ததும் செல்போனை
மேசைமீது வைத்துவிட்டு தலைகுனிந்து சிந்திப்பவர்போல அந்த கண்ணீரை இமைகளாலேயே தேய்த்து
அழித்தார்.
எலும்பு முறிவு அறுவைசிகிழ்ச்சை
நிபுணரான டாக்டர் வந்தியதேவன் தனது கையில் கைத்தியை எடுத்தால் கூற்றுவன் நோயாளியை விட்டுவிட்டு
தனது வாகனத்தையும் மறந்து ஓடிவிடுவான்.
அவர் கண்ணிலா இன்று கண்ணீர்? கண்ணீருக்கே
ஆச்சர்யம்தான்.
உதட்டில் மலரும் புன்னகையும்,
முகத்தில் தவழும் அமைதியும், உள்ளத்தில் ததும்பும் கருணையும் கொண்டு டாக்டர் வந்தியதேவன்
வரும்போதே நோயாளிகளின் மனதில் நம்பிக்கையும்,
நோயாளிகளின் உறவுகளின் உள்ளத்தில் அமைதியும் கனிந்துவிடும்.
கிராமத்தில் உள்ள டாக்டர் குடும்பத்தின்
பூர்வீக நிலத்தை கைப்பற்றுவதற்காக பணத்தையும்,
மனத்தையும் கறுப்பாக வைத்திருக்கும் பக்கத்து தெரு நாகப்பன் தினமும் ஒரு பிரச்சனையை
டாக்டரின் குடும்பத்திற்கு செய்துக்கொண்டு
இருக்கிறான்.
கொடுமையின் உச்சமாக அவன் வயலுக்கு
மேயபோன தாய்பசுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டான். ”தாயை இழந்த கன்று துடிப்பதை பார்க்க
முடியவில்லை, அந்த வயலை அவனிடமே விற்றுவிடுவோம் அதற்காக இன்னும் என்ன என்ன கொடுமை செய்வானோ
என்று நினைத்தாலே பயமாக உள்ளது” என்று அண்ணன் சொன்னபோதுதான் டாக்டர் கலங்கினார்.
மனம் அறிந்த சில உண்மைகளை சட்டம்
அறிந்த உண்மைகளாக்க முடியாதபோது பாமரன் முதல் படித்தவன்வரை செய்வதறியாது விழித்து கண்ணீர்தான்
விடவேண்டி உள்ளது.
நல்லவர்களின் கண்ணீருக்கு விலை
உண்டு, அது எந்த பாறையையும் பிளந்து மூழ்கடித்துவிடும்.
நாகப்பனின் கொடுமைகளை சட்டத்தின்
முன் கொண்டு செல்ல மருத்துவரின் குடும்பத்திடம் எந்த ஆதாரங்களும் இல்லை.
நாகப்பன் தருமத்தின் அனைத்து பாதைகளையும்
அடைத்துவிட்டு பணப்பாதையில் மட்டுமே நடப்பவன். அவன் தேடிய பணமெல்லாம் இருள்வழிப் வந்த
செல்லும் காகிதங்கள் மட்டும்தான். பாவவழியல் உண்டாக்கிய பணத்தைக்கொண்டு மேலும் மேலும்
பாவத்தையே வாங்கி, பாவக்கோட்டையை கட்டி தன்னைச்
சுற்றி எழுப்பிக்கொண்டு இருக்கிறான்.
ஏழை எளிய மக்களின் நிலங்களை வட்டிக்கு
எழுதி வாங்கி உரிமையாக்கிக் கொண்ட உடமைகள்
அவனுடையது. அவன் கால்படும்போது அந்த மண் வயிறு எரிவதை அவனால் அறியா முடியாது.
மருத்துவரின் குடும்ப நிலத்தையும்
எழுதி வாங்கிவிட்டால் அதன்பின் மக்களுக்கு நடக்க கூட வழியிருக்காது அந்த வயல்வெளிப்பக்கம்.
அதன் மூலமே மற்றவர்களின் நிலத்தையும் வாங்கிவிடலாம் என்பதுதான் அவனின் இறுதித்திட்டம்.
தோள்மேல் கிடந்த ஸ்டெதஸ்கோப்பை மேசைமேல் வைத்துவிட்டு முகம் கழுவிக்கொண்டு
வந்து அமர்ந்த மருத்துவர் மேசைமீது இருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழி புத்தகத்தை
தொட்டுக்கும்பிட்டு அதை எடுத்து தனது தலையில் வைத்துக்கொண்டு சற்று நேரம் கண்மூடி அமர்ந்திருந்தார்.
மனதில் மலரும் அமைதி அவர் முகத்தில்
புன்னகையாக இதழ்விரித்தது.
அமுதமொழியை தலையில் இருந்து எடுத்து
மேசைமீது வைத்துவிட்டு ஸ்டெதஸ்கோப்பை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு அறையைவிட்டு
வெளியே கிளம்பியபோது உள்ளே வந்த நர்ஸ் இந்துமதி மூன்றாம் அறையில் உள்ள நோயாளி வலியால் துடிப்பதாக சொன்னாள்.
அறையை நோக்கி நடக்கும்போதே அவனுக்கு
என்ன மருந்துக்கொடுக்க வேண்டும் என்பதை அறிந்ததால் அவரின் நடையில் கம்பீரம், முகத்தில்
சாந்தமும் வந்து இணைந்துக்கொண்டது.
படுக்கையில் கிடந்து வலியால் துடித்த
நோயாளியின் மீது டாக்டரின் கைப்பட கைப்பட தாயின் அன்பில் கரையும் குழந்தைபோல அவன் அமைதி அடைந்தான்.
உறவினர்கள் கையெடுத்துக்கும்பிட்டார்கள்,
புன்னகையால் அதை ஏற்றுக்கொண்ட டாக்டர் அடுத்த
அறைக்கு செல்லும்போது நாகப்பன் நினைவால் நெற்றி சுருங்குவதைப் அறிந்து தலையை உதறிக்கொண்டார்.
டாக்டரின் கைப்பட்டதும் அமைதியடையும்
நோயாளிகளை கண்டு அதிசயம் அடையும் நர்ஸ் இந்துமதி “இந்த அற்புதம் எப்படி டாக்டர்?, உங்களுக்க
மட்டும் எப்படி சாத்தயம்? ஒவ்வொரு நாளும் வியக்கிறேன்” என்று உள்ளம் பூரிக்க கேட்டாள்.
நாகப்பன் நினைவில் இருந்து விடுபட்ட
டாக்டர் தனது நடையை நிறுத்தி, கம்பீரம் குறையாமல் கழுத்தை மட்டும் திருப்பி நர்ஸைப்பார்த்து
“சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் படிப்பது உண்டா?” என்றார்.
“நமது மருத்துவமனையின் வரவேற்பறையில்
உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் படிப்பது உண்டு” என்றாள் மென்குரலில் நர்ஸ் இந்துமதி.
“நல்லது அதில் படித்திருக்கலாமே.
“ஏழைகளிடமும், பலகீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவனைக் காண்பவனே
உண்மையில் சிவனை வழிபடுகிறான்” என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை. நான் நோயாளிகளை சிவனாகப் பார்க்கின்றேன். எனது தொழிலையே
அந்த சிவனுக்கான பூசையாக செய்கின்றேன்” என்றார்.
நர்ஸ் இந்துமதியின் கைகள் அவளையும்
அறியாமல் உயர்ந்து டாக்டரை கும்பிட்டது. அவளுக்கு கோட்டுப்போட்ட சிவபூசை செல்வராகவே
அப்போது டாக்டர் தெரிந்தார்.
அப்போது “காப்பாத்துங்க டாக்டர்”
என்று ஒரு கும்பல் விபத்தில் அடிப்பட்ட ஒரு குழந்தையை இரத்தம் வழிவழிய மருத்துவமனைக்குள் தூக்கிக்கொண்டு ஓடிவந்ததைப்
பார்த்ததும் இந்துமதி பரபரப்பானாள்.
மருத்துவமனை ஊழியர்களும் நர்ஸுகளும்
மிகவிரைவாக அவசரசிகிழ்ச்கை அறையை தயார் செய்து விட்டார்கள்.
அது தனது குடும்பத்திற்கு தொல்லைதரும்
நாகப்பன் குழந்தை என்பதை அறிந்ததும் டாக்டர்
ஈவு இரக்கம் எதுவும் இல்லாத பேய்போல “நான் கேட்பதைக் கொடுத்தால்தான் மருத்துவம் பார்ப்பேன்”
என்றார்.
சற்றுமுன் தனது கண்ணுக்கு சிவபக்தனாக
தெரிந்தவரா இவர் என்று நர்ஸ் இந்துமதி வாயடைத்துப்போனாள். அவரை அவள் ஒருநாளும் அப்படிப்
பார்த்தது இல்லை. பயந்துப்போனாள். அந்த குழந்தை பிழைப்பானோ இறப்பானோ என்று வேதனைப்பட்டாள்.
டாக்டர் வந்தியதேவனால்தான் இந்த
குழந்தையை காப்பாற்ற முடியும் என்று மற்ற டாக்டர்கள்
கைவிரித்தப் பின்புதான் நாகப்பன் இங்கு வந்து உள்ளார்.
டாக்டர் தன்னை பழிக்கு பழி வாங்குவதாக
நாகப்பன் நினைத்தாலும், வெளியில் காட்டிக்கொள்ளும் நேரமில்லை.முடியாது என்று மறுக்கவும்
வழியில்லை.
கண்ணீர் வழியும் கண்ணோடு மருத்துவரின்
காலைபிடிக்க ஓடிவந்த நாகப்பன் அவரையும் அறியாமல்
”எனது சொத்து முழுவதையும் எழுதித்தரேன் டாக்டர் எனது பிள்ளையை காப்பாத்துங்க”
என்றார்.
“நீங்கள் சொன்னப்படி எனது குடும்பநிலத்திற்கு
பக்கத்தில் இருக்கும் நிலத்தை எனது பெயருக்கு எழுதிக்கொடுங்கள்” என்றார் டாக்டர்.
“எனது மகன் உயிர் பிழைத்தால் போதும்,
எனது உயிரையே தருகிறேன்” என்றார் நாகப்பன்.
மாயை தயை என்று குருதேவர் அமுதமொழியல்
சொன்ன சொல் டாக்டரின் நினைவில் ஏழுந்து அசைந்தது.
நாகப்பனின் பிள்ளைப்பாசத்தைப்
பார்த்து மாயை..மாயை என்று டாக்டர் மனதுக்குள் சொல்லிக்கொண்டார். “நான் காப்பாற்றுகின்றேன்” என்று டாக்டர்கள் சொல்லும்போது இறைவன் சிரிக்கிறான்
என்று குருதேவர் சொன்ன சொல் நினைவில் எழுந்ததும் தன்னைத்தானேப் பார்த்து சிரித்துக்கொண்டார்.
இறைவன் அருளால் நாகப்பன் மகன்
பிழைத்துக்கொண்டான். நாகப்பன் வேறு வழியில்லாமல் மருத்துவரின் குடும்பநிலத்திற்கு பக்கத்தில்
உள்ள இரண்டு காணிநிலத்தை மருத்துவர் பெயருக்கு எழுதிக்கொடுத்தார்.
பத்திரத்தை வாங்கிக்கொண்ட டாக்டர்
நாகப்பனிடம் “உங்கள் மகன் உயிருக்கும் ஒரு பசுவின் உயிருக்கும் எந்த வித்தியாசம் இல்லை என்பதை இனியாவது புரிந்துக்கொள்ளுங்கள், மனிதன்
மட்டும்தான் வாழவேண்டும் என்று நினைத்திருந்தால் இறைவன் மற்ற உயிரினங்களைப் படைதிருக்கவே
மாட்டார். டாக்டருக்கு படித்திருந்தால்கூட போகிற உயிரை மனிதனால் காப்பாற்ற முடியாது,
இறைவனால் மட்டும்தான் உயிர்களை காக்கமுடியும். குழந்தையை நலமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்
” என்றபடியே அந்த பத்திரத்தை திருப்பி நாகப்பனிடமே கொடுத்தார்.
“மன்னித்துவிடுங்கள் டாக்டர்,
நான் திருந்திவிட்டேன் இந்த நிலத்தை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் நிலத்தை வாங்க
நினைத்த எனக்கு இது ஒரு தண்டனையாக இருக்கட்டும்”
என்று நாகப்பன் பத்திரத்தை வாங்க மறுத்தார்.
“எங்கள் குடும்பநிலத்தை நமது ஊர்
பள்ளி மாணவிகள் தங்கிப்படிக்க மாணவியர் விடுதிக்கட்டிக்கொள்ள
இலவசமாகக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். நீங்களே உங்கள் நிலத்தை வைத்துக்கொள்ளுங்கள்,
நமது ஊர் மக்கள் நமது சொந்தம் என்று வாழுங்கள். உங்கள் மகனை எனது மகனாக நினைத்துதான்
வைத்தியம் செய்தேன்” என்ற டாக்டரின் கைகளை கண்ணீர் மல்க பிடித்து கண்ணில் ஒற்றிக்கொண்டார்
நாகப்பன்.
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியை
கடைப்பிடிக்கின்றேன். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் படிக்கின்றேன் என்று சொல்லிக்கொள்ளும்
மருத்துவர் ஒரு குழந்தையின் உயிரைப் பணயமாக வைத்து நிலத்தை எழுதி வாங்க இருந்ததைப்
பார்த்து அவர்மீது அடங்காத கோவம் கொண்ட நர்ஸ் இந்துமதி. டாக்டரின் பெரும்தன்மையைப்
பார்த்து வாயடைத்துப்போனாள்.
அவள் மனதில் அசையும் எண்ண அலைகளை அறிந்த டாக்டர் வந்தியதேவன் சிரித்தபடியே
மேஜைமீது இருந்த ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் முதல்பாகம் நூலை பிரித்து பதினேழாம்
பக்கத்தில் கடைசிப்பாராவை சுட்டிக்காட்டி இந்துமதியை வாய்விட்டுப் படிக்க சொன்னார். அவள் படித்தாள்…
ஸ்ரீராமகிருஷ்ணர் –“உலகில் வாழ நேரும்போது, தீயவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள
சிறிது தமோகுணத்தைக் காட்டுவது அவசியம்தான். ஆனால் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக
நாமும் அவர்களுக்கு தீமை செய்யக்கூடாது”.
அவள் மனம் உருகி மென்மையானது.
டாக்டர் சிரித்துக்கொண்டே “அந்த
குழந்தையின் உயிரை நான் பணயமாக வைக்கவில்லை,
அந்த குழந்தையையும் நான் சிவனாகத்தான் பார்த்தேன், இந்த சிவனின் மூலம்தான் அவன் தந்தையின் பேராசை, பொறாமை,
குரோதம் என்ற மூன்று சுயநலக் கோட்டையையும் எரிக்கமுடியும் என்று நினைத்து பகவானிடம்
வேண்டிக்கொண்டுதான் இப்படி ஒரு நாடகம் ஆடினேன். அந்த குழந்தை அவன் தந்தை பறந்துக்கொண்டு
இருந்த முப்புரங்களை எரித்த சிவன்” என்றார்
*****************************
ராமராஜன் மாணிக்கவேல்
ஜுன்-15-2014
No comments:
Post a Comment