Tuesday, June 11, 2019

திருப்புகழ் 250 எனை அடைந்த (திருத்தணிகை)



ஓம் முருகன் துணை 
சிவகுருநாதா போற்றி 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
திருத்தணிகை மலை முருகா பெருமானுக்கு அரஹரோ ஹரா

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 250 எனை அடைந்த  (திருத்தணிகை)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான

......... பாடல் .........

எனையடைந்த குட்டம் வினை மிகுந்த பித்தம்
     எரிவழங்கு வெப்பு ...... வலிபேசா
இகலி நின்றலைக்கு முயலகன் குலைப்பொடு
     இருமல் என்று உரைக்கும் ...... இவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமை நினைந்து சுத்த
     மதி மயங்கி விட்டு ...... மடியாதே
மருவி இன்றெனக்கு மரக தஞ்சிறக்கு
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்

நினை வணங்கு பத்தர் அனைவருந் தழைக்க
     நெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலா
நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்ர
     நெடிய குன்றில் நிற்கு ...... முருகோனே

தினைவிளங்கல் உற்ற புன இளங்குறத்தி
     செயல் அறிந்து அணைக்கு ...... மணிமார்பா
திசைமுகன் திகைக்க அசுரர் அன்றடைத்த
     சிறை திறந்து விட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எனையடைந்த குட்டம் வினைமிகுந்த பித்தம் ... எனக்கு வந்த
குஷ்டநோய், வினைக்கு ஈடாக மிகுந்துவரும் பித்த நோய்,

எரிவழங்கு வெப்பு ... கொதிப்பைத் தருகிற காய்ச்சல்,

வலிபேசா இகலி நின்றலைக்கு முயலகன் ... சொல்ல முடியாத
வலியோடு, மாறுபட்டுத் துயர்தந்து வருத்தும் முயலகன் என்ற
வலிப்புநோய்,

குலைப்பொடு இருமலென்று உரைக்கும் இவையோடே ...
நடுக்க நோயுடன், இருமல் எனச் சொல்லப்படும் இந்த
நோய்களுடனே தவித்து,

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநினைந்து ... வீடுகள், பெண்டிர்,
மக்கள் என்ற இவர்களை நினைந்து வருந்தி,

சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே ... நல்லறிவு மயங்கிப்போய்
அடியேன் இறக்காதவண்ணம்,

மருவியின்றெ னக்கு மரகதம் சிறக்கு மயிலில் ... நீ இன்று
என்முன் தோன்றி, மரகத ஒளிவீசும் பச்சைமயில் வாகனத்தில்

வந்து முத்தி தரவேணும் ... வந்து எனக்கு பேரின்ப முக்தியை
அருள்வாயாக.

நினைவ ணங்கு பத்தரனைவருந்தழைக்க ... உன்னைத் தொழும்
அடியார்கள் யாவரும் சுகத்துடன் இருக்கும்படி

நெறியில் நின்ற வெற்றி முனைவேலா ... அதற்கான வழியில்
அவர்களுடன் நின்று, கையில் வெற்றிபெறும் கூரிய வேலாயுதத்துடன்
நிற்கும் வேலனே,

நிலைபெ றுந்திருத்த ணியில்விளங்கு ... அழியாத திருத்தணிகைப்
பதியில் விளங்குகின்ற

சித்ர நெடிய குன்றில் நிற்கு முருகோனே ... அழகிய நெடிய
குன்றத்தில் எழுந்தருளியுள்ள முருகனே,

தினைவிளங்கலுற்ற புனஇளங்குறத்தி ... தினைப்பயிர் செழிப்பாக
வளர்ந்துள்ள புனத்தில் வாழும் இளம் குமரியான குற வள்ளியை,

செயலறிந்து அணைக்கு மணிமார்பா ... அவளுடைய
அன்புச்செயலை அறிந்து அணைக்கின்ற அழகிய திருமார்பினனே,

திசைமுகன்திகைக்க அசுரர் அன்றடைத்த ... பிரமதேவன்
திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த

சிறைதிறந்து விட்ட பெருமாளே. ... சிறைகளைத் திறந்து விட்டு
தேவர்களை விடுவித்த பெருமாளே.


நன்றி. கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0250_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

No comments:

Post a Comment