Thursday, April 11, 2019

திருப்புகழ் 240 அரகர சிவன் அரி (திருத்தணிகை)


ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சுவாமிநாதா போற்றி போற்றி

முருகா சரணம் 

ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்

திருப்புகழ் 240 அரகர சிவன் அரி  (திருத்தணிகை)

பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான


......... பாடல் .........


அரகர சிவன்அரி அயன் இவர் பரவிமுன்
      அறுமுக சரவண ...... பவனேயென்


றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
     அநலென எழவிடு ...... மதிவீரா


பரிபுர கமலமது அடியிணை அடியவர்
     உளமதில் உறவருள் ...... முருகேசா


பகவதி வரைமகள் உமைதர வருகுக
     பரமனது இருசெவி ...... களிகூர


உரைசெயும் ஒருமொழி பிரணவ முடிவதை
     உரைதரு குருபர ...... வுயர்வாய


உலகமன் அலகில வுயிர்களும் இமையவர்
     அவர்களும் முறுவர ...... முநிவோரும்


பரவிமுன் அநுதின மனமகிழ் வுறவணி
     பணிதிகழ் தணிகையில் ...... உறைவோனே


பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
      இருபுடை யுறவரு ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........


அரகர சிவன் ... பாவங்களைப் போக்கவல்ல சிவனும்,

அரிஅயனிவர் பரவ ... திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும்

பரவி முன் ... போற்றி நின்று உனது முன்னிலையில்

அறுமுக சரவண பவனே ... ஆறுமுகனே, சரவணபவனே,

என்று அநுதின மொழிதர ... என்று கூறி நாள்தோறும் துதிக்க,

அசுரர்கள் கெட ... சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு

அநலென எழ ... அக்கினி போல எழும்பிய

அயில்விடும் அதிவீரா ... வேலினை விடுத்த வீர மூர்த்தியே,

பரிபுர கமலமது ... வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற

அடியிணை யடியவர் ... உன் திருவடிகளை உன் அடியார்களின்

உளமதில் உற ... உள்ளத்தில் பொருந்துமாறு

அருள் முருகேசா ... அருள்செய்யும் முருகக் கடவுளே.

பகவதி வரைமகள் உமை ... மலையரசன் மகளாக வந்த பகவதியின்

உமாதேவி தர வருகுக ... அருளினால் வந்த குகனே,

பரமன திருசெவி களிகூர ... சிவனின் இருசெவிகளும் மகிழும்படி

உரைசெயு மொருமொழி ... யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய

பிரணவ முடிவதை ... பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை

உரைதரு குருபர ... உபதேசித்த மேலான குருவே,

உயர்வாய உலக மன் ... உயர்ந்த இவ்வுலகில் வாழும்

அலகில வுயிர்களும் ... எண்ணற்ற உயிர்களும்

இமையவர் அவர்களும் ... தேவர்களும்

உறுவர முநிவோரும் ... பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும்

பரவிமுன் ... உன் முன்னேவணங்கி துதி செய்து,

அநுதின மனமகிழ் வுற ... நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு

அணி பணிதிகழ் ... அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய*

தணிகையில் உறைவோனே ... திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே,

பகர்தரு குறமகள் ... புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும்,

தருவமை வநிதையும் ... கற்பகத்தருவின் கீழே வளர்ந்த
தேவயானையும்,

இருபுடை யுறவரு பெருமாளே. ... இருபுறமும் பொருந்த
வந்த பெருமாளே**

* பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால்
புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க
நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.


**
வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன்
திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = கிரயாசக்தி.

இப்பாடல் துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாதது.

நன்றி கௌமாரம்.காம் 
http://www.kaumaram.com/thiru/nnt0240_u.html



வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம்

1 comment: