Tuesday, April 23, 2019

திருப்புகழ் 525 சரவண பவநிதி (திருவேங்கடம்)

ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
முருகா சரணம் 


ஸ்ரீஅருணகிரிநாதர் சுவாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 525 சரவண பவநிதி  (திருவேங்கடம்)


   பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்


தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன தனதன தனதன
          தனதன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

சரவண பவநிதி அறுமுக குருபர
     சரவண பவநிதி அறுமுக குருபர
          சரவண பவநிதி அறுமுக குருபர ...... எனவோதித்
தமிழினில் உருகிய அடியவர் இடமுறு
     சனன மரணமதை ஒழிவுற சிவமுற
          தருபிணிதுள வரம் எமதுயிர் சுகமுற ...... அருள்வாயே

கருணைய விழிபொழி ஒருதனி முதலென
     வருகரி திருமுகர் துணைகொளும் இளையவ
          கவிதை அமுதமொழி தருபவர் உயிர்பெற ...... அருள்நேயா
கடலுலகினில் வருமுயிர்படும் அவதிகள்
     கலகம் இனையதுள கழியவும் நிலைபெற
          கதியும் உனது திருவடிநிழல் தருவதும் ...... ஒருநாளே

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
     குமர சமரபுரி தணிகையு மிகுமுயர்
          சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய ...... வடிவேலா
தினமும் உனதுதுதி பரவிய அடியவர்
     மனதுகுடியும் இருபொருளிலும் இலகுவ
          திமிர மலமொழிய தினகரனென வரு ...... பெருவாழ்வே

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
     மருகனெனவெ வரும் அதிசயம் உடையவ
          அமலி விமலி பரை உமையவள் அருளிய ...... முருகோனே
அதலவிதல முதல் கிடுகிடு கிடுவென
     வருமயில் இனிதொளிர் ஷடுமையில் நடுவுற
          அழகினுடன் அமரும் அரகர சிவசிவ ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே*, நிதியே,
ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே, நிதியே,
ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர ... சரவணபவனே, நிதியே,
ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

எனவோதித் தமிழினி லுருகிய ... என்று பல முறை தமிழினில்
ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற

அடியவரிடமுறு ... உன் அடியார்களுக்கு உற்ற

சனனமரணமதை யொழிவுற சிவமுற ... பிறப்பு, இறப்பு என்பவை
நீங்கவும், சிவப்பேறு அடையவும்,

தருபிணி து(ள்)ள ... வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும்,

வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே ... வரத்தினை நீ எங்கள் உயிர்
இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக.

கருணைய விழிபொழி ... கண்களினின்றும் பொழிகின்ற கருணையை
உடையவனே,

ஒருதனி முதலென வருகரி திருமுகர் ... ஒப்பற்ற தனிப் பெரும்
தலைவனென வந்த யானைமுகக் கணபதியை

துணைகொளு மிளையவ ... துணையாகக் கொண்ட இளையவனே,

கவிதை யமுதமொழி தருபவர் ... கவிதைகளாகிய அமுத
மொழிகளை வழங்குபவருடைய

உயிர்பெற அருள்நேயா ... உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள்
புரியும் நேசம் உடையவனே,

கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் ... கடல் சூழ்ந்த
இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும்,

கலகம் இனையதுள கழியவும் ... கலக்கங்களும், இன்னும்
இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும்,

நிலைபெறகதியும் ... நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும்,

உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே ... உனது திருவடி நிழல்
அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ?

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய குமர ... திரிபுரங்களை
எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே,

சமரபுரி தணிகையு மிகுமுயர் ... திருப்போரூரிலும்,
திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த

சிவகிரியிலும்வட மலையிலும் உலவிய வடிவேலா ...
சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே,

தினமும் உனது துதி பரவிய அடியவர் ... நாள்தோறும் உன்
புகழைக் கூறும் அடியார்களின்

மனது குடியும் ... உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே,

இரு பொருளிலும் இலகுவ ... அருட்செல்வம், பொருட்செல்வம்
ஆகிய இரண்டிலும் விளங்குபவனே,

திமிர மலமொழிய ... இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு

தினகரன் எனவரு பெருவாழ்வே ... ஞானசூரியனாக வருகின்ற
பெரும் செல்வமே,

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் ... பாம்பணையில்
துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின்

மருகனெனவெ வரும் அதிசயமுடையவ ... மருகோனாக வரும்
அதிசய மூர்த்தியே,

அமலி விமலி பரை ... மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும்,
பெரியவளும் ஆகிய

உமையவள் அருளிய முருகோனே ... உமாதேவி தந்தருளிய
முருகக் கடவுளே,

அதல விதலமுதல் கிடுகிடு கிடுவென ... அதலம் விதலம் முதலிய
ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க

வருமயிலினிதொளிர் ... வருகின்ற மயிலின் மீது இனிதாக
ஒளி வீசுபவனே,

ஷடுமையில் நடுவுற அழகினுடன்அமரும் ... ஆறுகோணச்
சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற

அரகர சிவசிவ பெருமாளே. ... ஹர ஹர சிவ சிவ, பெருமாளே.



* 'சரம்' - தர்ப்பை, 'வனம்' - காடு, 'பவன்' - வெளிப்பட்டவன். நாணற்புல் காட்டில் தோன்றியதால் 'சரவனபவன்'. தமிழ் இலக்கண விதிப்படி 'ர'கரத்தின் பின்வரும் 'ன'கரம் 'ண'கரமாகும் என்பதால் 'சரவணபவன்'

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0525_u.html


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

No comments:

Post a Comment