Friday, April 26, 2019

திருப்புகழ் 900 அரி மருகோனே (வயலூர்)


ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
வயலூர் முருகா போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 900 அரி மருகோனே  (வயலூர்)

பொருள் எழுதியது    ஸ்ரீ கோபால சுந்தரம்

தனதன தானான தானந் தனதன தானான தானந்
     தனதன தானான தானந் ...... தனதான

......... பாடல் .........

அரிமருகோனே நமோவென்று அறுதியிலானே நமோவென்று
      அறுமுக வேளே நமோவென்று ...... உனபாதம்
அரகர சேயே நமோவென்று இமையவர் வாழ்வே நமோவென்று
      அருண சொரூபா நமோவென்று ...... உளதாசை

பரிபுர பாதா சுரேசன் தருமகள் நாதா அராவின்
     பகைமயில் வேலாயுதா ஆடம்பர ...... நாளும்
பகர்தலிலா தாளை யேதுஞ் சிலதறியா ஏழை நானுன்
     பதிபசு பாச உபதேசம் ...... பெறவேணும்

கரதல சூலாயுதா முன் சலபதிபோல ஆரவாரங்
     கடின சுராபான சாமுண்டியும் ...... ஆடக்
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனாபதீ யென்று
     களமிசை தானேறியே அஞ்சிய ...... சூரன்

குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
     குடல்கொளவே பூசலாடும் ...... பலதோளா
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
     குளிர்வயலூர் ஆரமேவும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அரிமருகோனே நமோவென்று ... திருமாலின் மருமகனே போற்றி
என்றும்,

அறுதியிலானே நமோவென்று ... முடிவு என்பது அற்றவனே
போற்றி என்றும்,

அறுமுக வேளே நமோவென்று ... ஆறுமுகக் கடவுளே போற்றி
என்றும்,

உனபாதம் அரகர சேயே நமோவென்று ... உனது பாதத்தில்,
பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும்,

இமையவர் வாழ்வே நமோவென்று ... தேவர்களின் செல்வமே
போற்றி என்றும்,

அருண சொரூபா நமோவென்று ... செந்நிறத்துச் சொரூபனே
போற்றி என்றும்,

உளதாசை ... பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை
இருக்கிறது.

பரிபுர பாதா ... வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே,

சுரேசன் தரு மகள் நாதா ... தேவேந்திரன் பெற்ற மகள்
தேவயானையின் நாதனே,

அராவின்பகைமயில் வேலாயுத ஆடம்பர ... பாம்பின் பகையான
மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே,

நாளும் பகர்தலிலா தாளை ... ஒரு நாளேனும் நினைத்துச்
சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி

ஏதுஞ் சிலதறியா ஏழை நானுன் ... சிறிதளவு கூட எதுவும் அறியாத
ஏழை நான் உன் திருவாயால்

பதிபசு பாச உபதேசம் பெறவேணும் ... பதி, பசு, பாசம்*
ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும்.

கரதல சூலாயுதா ... கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே,

முன் சலபதி போல் ஆரவாரம் ... முன்னொரு நாள், கடல் போலப்
பேரோலியும்

கடினசுராபான சாமுண்டியும் ஆட ... கொடிய கள்ளைக் குடித்தலும்
உடைய துர்க்கை ஆடவும்,

கரிபரி மேலேறுவானும் ... யானையை (ஐராவதம்) வாகனமாகக்
கொண்ட இந்திரனும்

செயசெய சேனா பதீயென் ... ஜெய ஜெய சேனாபதியே என்று
ஆரவாரம் செய்யவும்,


களமிசை தானேறியே ... போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால்


அஞ்சிய சூரன் குரல்விட ... பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும்,

நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகம் ... நாயும், பேயும்,
பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும்

குடல்கொளவே ... அவனது குடலைக் கீறித் தின்னவும்,

பூசலாடும் பலதோளா ... சண்டை செய்த பல தோள்களை
உடையவனே,

குடதிசை வாராழி போலும் ... மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம்
போன்று

படர்நதி காவேரி சூழும் ... பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்த

குளிர்வயலூர் ஆர மேவும் பெருமாளே. ... குளிர்ந்த வயலூரில்*
உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே.

* பதி - கடவுள், பசு - ஜீவாத்மா, பாசம் - மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயை.

** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.

வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0900_u.html

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 

No comments:

Post a Comment