Thursday, May 23, 2019

திருப்புகழ் 22 அந்தகன் வருந்தினம் (திருச்செந்தூர்)



ஓம் முருகன் துணை
குருநாதா போற்றி சுவாமிமலை சாமிநாதா போற்றி
திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோ ஹரா


ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ் 
திருப்புகழ் 22 அந்தகன் வருந்தினம்  (திருச்செந்தூர்)


உரை எழுதியது. திரு.கோபாலசுந்தரம் ஐயா

தந்தன தனந்தனந் தனதனத்
     தந்தன தனந்தனந் தனதனத்
          தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான

......... பாடல் .........

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
     சந்ததமும் வந்து கண்டு அரிவையர்க்கு
          அன்புருகு சங்கதந் தவிர முக் ...... குணமாள
அந்தி பகலென்று இரண்டையும் ஒழித்து
     இந்திரிய சஞ்சலங்களை அறுத்து
          அம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்

செந்திலை உணர்ந்துணர்ந்து உணர்வுறக்
     கந்தனை அறிந்தறிந்து அறிவினிற்
          சென்று செருகுந்தடந்தெளிதரத் ...... தணியாத
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்து உரையொழித்து
     என்செயல் அழிந்தழிந்து அழியமெய்ச்
          சிந்தைவர என்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
     கும்பிடு புரந்தரன் பதிபெறக்
          குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
     கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
          குண்டலம் அசைந்து இளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்


தந்தன தனந்தனந் தனவெனச்
     செஞ்சிறு சதங்கைகொஞ்சிட மணித்
          தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான
சங்கரி மனங்குழைந்து உருக முத்
     தந்தர வருஞ் செழுந்தளர் நடைச்
          சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........

அந்தகன் வருந்தினம் பிறகிட ... யமன் வருகின்ற தினமானது பின்
தள்ளிப் போக,

சந்ததமும் வந்துகண்டு அரிவையர்க்கு அன்புருகு சங்கதம்
தவிர ... எப்போதும் வருவதும் போவதும் காண்பதுமாய், பெண்களிடம்
அன்பு காட்டி உருகக்கூடிய தொடர்பு விட்டு நீங்க,

முக் குணம் மாள ... சத்துவம், ராஜதம், தாமதம் என்ற மூன்று
குணங்களும் அழித்து,

அந்திபகலென்றிரண்டையுமொழித்து ... இரவு (ஆன்மா
செயலற்றுக் கிடக்கும் நிலை), பகல் (ஆன்மா உழலும் நிலை) என்னும்
இரண்டு நிலைகளையும் ஒழித்து,

இந்திரிய சஞ்சலங் களையறுத்து ... ஐம்பொறிகளால் வரும்
துன்பங்களை அறுத்து,

அம்புய பதங்களின் பெருமையைக் கவிபாடி ... தாமரை போன்ற
உன் திருவடிகளின் பெருமையைக் கவிபாடி,

செந்திலை உணர்ந்து உணர்ந்து உணர்வுற ... திருச்செந்தூரைக்
கருதி உணர்ந்து ஞானம் பிறக்க,

கந்தனை அறிந்து அறிந்து அறிவினில் ... கந்தக் கடவுளாம்
உன்னைஅறிந்து அறிந்து அந்த அறிவின் வழியே

சென்று செருகுந் தடந் தெளிதர ... சென்று நுழைந்து முடிகின்ற
இடம் தெளிவு பெற,

தணியாத சிந்தையும் அவிழ்ந்து அவிழ்ந்து ... அடங்காத மனமும்
நெகிழ்ந்து நெகிழ்ந்து,

உரையொழித்து என்செயல் அழிந்தழிந்து அழிய ... பேச்சும்
நின்று, எனது செயலும் அடியோடு அற்றுப் போக,

மெய்ச்சிந்தைவ ரஎன்றுநின் தெரிசனைப் படுவேனோ ...
உண்மையான அறிவு வர, எப்பொழுது உன்னைக் காணும் பாக்கியத்தை
யான் பெறுவேனோ?

கொந்தவிழ் சரண்சரண் சரணென ... மலர்க் கொத்துக்கள் கிடக்கும்
பாதங்களே சரணம் சரணம் என்று

கும்பிடு புரந்தரன் பதிபெற ... கும்பிட்ட இந்திரன் தனது ஊராகிய
அமராவதியை மீண்டும் பெற,

குஞ்சரி குயம்புயம் பெற ... யானை வளர்த்த மகள் தேவயானையின்
மார்பகம் உன் திருப்புயங்களைப் பெற,

அரக்கரும் மாள ... அரக்கர்கள் யாவரும் மாண்டழிய,

குன்றிடிய ... கிரெளஞ்ச மலை பொடிபட்டு விழ,

அம்பொனின் திருவரைக் கிண்கிணி கிணின்கிணின்
கிணினென ... அழகிய பொன்னாலான அரைஞாண் கிண்கிணி
கிணின் கிணின் கிணின் என்று ஒலிக்க,

குண்டலம் அசைந்திளங் குழைகளிற் ப்ரபைவீச ...
குண்டலங்கள் அசைந்து சிறிய காதணிகளில் ஒளிவீச,

தந்தன தனந்தனந் தனவென ... தந்தன தனந்தனந் தன என்ற
ஓசையோடு

செஞ்சிறு சதங்கைகொஞ்சிட ... செவ்விய சிறு சதங்கைகள்
சிற்றொலி செய்திட,

மணித் தண்டைகள் கலின்கலின் கலினென ... மணித் தண்டைகள்
கலின்கலின் கலின் என்று சப்திக்க,

திருவான சங்கரி மனங்குழைந்துருக ... அழகிய சங்கரி மனம்
குழைந்து உருகி நிற்க,

முத்தந்தர வருஞ்செழுந் தளர்நடைச் சந்ததி ... முத்தம் தர வரும்
செழுவிய தளர்ந்த நடைப் பிள்ளையே,

சகந்தொழுஞ் சரவணப் பெருமாளே. ... இந்த வையமெல்லாம்
தொழும் சரவணப் பெருமாளே.

நன்றி. கௌமாரம். காம். http://www.kaumaram.com/thiru/nnt0022_u.html

No comments:

Post a Comment