Saturday, May 11, 2019

திருப்புகழ் 4 நினது திருவடி (விநாயகர்)




ஓம் முருகன் துணை 
சுவாமிமலை சாமிநாதா போற்றி 
ஸ்ரீகற்பகவிநாயகர் திருவடிப்போற்றி 

ஸ்ரீஅருணகிரிநாதர் சாமிகள் அருளிய திருப்புகழ்
திருப்புகழ் 4 நினது திருவடி  (விநாயகர்)

பொருள் எழுதியது     ஸ்ரீ கோபால சுந்தரம்

தனன தனதன தத்தன தத்தன

     தனன தனதன தத்தன தத்தன
          தனன தனதன தத்தன தத்தன ...... தனதான


......... பாடல் .........


நினது திருவடி சத்தி மயிற்கொடி
     நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
          நிறைய அமுதுசெய் முப்பழம் அப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
     நிறவில் அரிசி பருப்பவல் எட்பொரி
          நிகரில் இனிகதலிக் கனி வர்க்கமும் ...... இளநீரும்


மனது மகிழ்வொடு தொட்ட கரத்தொரு
     மகர சலநிதி வைத்த துதிக்கர
          வளரு கரிமுக ஒற்றை மருப்பனை ...... வலமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே


தெனன தெனதென தெத்தெனனப் பல
     சிறிய அறுபத மொய்த்து உதிரப்புனல்
          திரளும் உறுசதை பித்த நிணக்குடல் ...... செறிமூளை
செரும உதர நிரப்பு செருக்குடல்
     நிரைய அரவ நிறைத்த களத்திடை
          திமித திமிதிமி மத்தளம இடக்கைகள் ...... செகசேசே


எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்து முழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெனத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்று நடித்திட
          எதிரு நிசிசரரைப் பெலியிட்டருள் ...... பெருமாளே.


......... சொல் விளக்கம் .........


நினது திருவடி சத்தி மயில் கொடி நினைவு கருதிடு புத்தி
கொடுத்திட ... (முருகா) உன்னுடைய திருவடி, வேல், மயில், சேவல்
(இவைகளை) நினைவில் கருதும் அறிவை நான் பெறுவதற்கு,


நிறைய அமுது செய் முப்பழம் அப்பமு(ம்) நிகழ் பால் தேன் ...
நிரம்பச் செய்யப்பட்ட அமுது, மூன்று வகையான பழங்கள், அப்பமும்,
புதிய பால், தேன்,


நெடிய வளை முறி இக்கொடு லட்டுகம் நிற வில் அரிசி
பருப்பு அவல் எள் பொரி ... நீண்டு வளைந்த முறுக்கு, கரும்புடன்,
லட்டு, நிறமும் ஒளியும் உள்ள அரிசி, பருப்பு, எள், பொரி,


நிகர் இல் இனி கதலி கனி வர்க்கமும் இளநீரும் ... ஒப்பில்லாத
இனிய வாழைப்பழ வகைகளும், இள நீரும் (ஆகிய நிவேதனப்
பொருட்களை),


மனது மகிழ்வொடு தொட்ட கரத்து ... மன மகிழ்ச்சியுடன் தொடும்
கைகளையும்,


ஒரு மகர சலநிதி வைத்த துதி கர ... ஒப்பற்ற மகர மீன்கள் உள்ள
கடலில் வைத்த துதிக்கையையும்* உடைய


வளரு(ம்) கரி முக ஒற்றை மருப்பனை வலமாக ... வளரும்
யானை முகத்து ஒற்றைக் கொம்பனாகிய கணபதியை வலம் வந்து,


மருவு மலர் புனை தொத்திர சொல் கொடு ... அவருக்கென்றே
பொருந்திய மலர் கொண்டு (வழிபட்டும்), துதிப்பதற்கு உரிய
சொற்களைக் கொண்டு (துதித்தும்),


வளர் கை குழை பிடி தொப்பண(ம்) குட்டொடு ... தூக்கிய
கைகளால் காதைப் பிடித்தும், தோப்புக்கரணம் போட்டும், சிரசில்
குட்டியும்**,


வனச பரி புர பொன் பத அர்ச்சனை மறவேனே ... (அந்த
விநாயகருடைய) தாமரை போன்ற, சிலம்பு அணிந்த அழகிய பாதங்களில்
அர்ச்சனை செய்வதை நான் ஒருபோதும் மறவேன்.


தெனன தெனதென தெத்தென அன பல சிறிய அறு பதம்
மொய்த்து உதிரப் புனல் ... தெனன தெனதென தெத்தென
இவ்வாறான ஒலி செய்யும் பல சிறிய ஈக்கள் மொய்க்கும் ரத்த நீர்,


திரளும் உறு சதை பித்த(ம்) நிணக் குடல் செறி மூளை ...
திரண்டுள்ள சதைகள், பித்தம் நிறைந்த மாமிசக் குடல்கள், சிதறிய
மூளைத் திசுக்கள்,


செரும உதர நிரப்பு(ம்) செருக் குடல் ... பிளந்த வயிற்றில்
நிறைந்துள்ள ஈரல்கள், பெருங்குடல்கள்,


நிரைய அரவ நிறைத்த களத்து இடை ... இவைகளோடு
வரிசைகளாக ஒலிக்கும் ஒலிகள் நிறைந்த போர்க் களத்தில்


திமித திமிதிமி மத்தள(ம்) இடக்கைகள் செகசே சே எனவெ ...
திமித திமிதிமி என்று ஒலிக்கும் மத்தளம், இடக்கை என்னும் வாத்தியம்
செகசே சே என ஒலிக்கவும்,


துகு துகு துத்தென ஒத்துகள் துடிகள் இடி மிக ஒத்து
முழக்கிட ... துகு துகு துத்தென்ற ஓசையுடன் ஊது குழலும் உடுக்கைப்
பறைகளும் இடி என மிக ஒத்து முழங்க,


டிமுட டிமு டிமு டிட்டிம் எனத் தவில் எழும் ஓசை ... டிமுட டிமு
டிமு டிட்டிம் என மேள வகைகள் ஓசைகள் எழுப்ப,


இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட ... ஒன்றோடொன்று
பகைத்த பேய்கள் கைப்பறைகளைக் கொட்ட,


இரண பயிரவி சுற்று நடித்திட ... ரண பைரவி என்னும் தேவதைகள்
சுற்றிக் கூத்தாட,


எதிரு நிசிசரரைப் பெலி இட்டு அருள் பெருமாளே. ... எதிர்த்து
வந்து அசுரர்களைப் பலி இட்டு அழித்த பெருமாளே.




* திருப்பாற் கடலைக் கடைந்த பொழுது மத்தாகிய மந்தர மலை அழுந்த, திருமால் அதை ஆமை உருவெடுத்து முதுகில் தாங்கினார். அதனால் இறுமாப்பு உற்று அவர் கடலைக் கலக்க, சிவபெருமான் ஏவலால் விநாயகர் அந்த ஆமையை அடக்கி, தமது துதிக்கையால் பொங்கிய கடல் நீர் முழுவதையும் குடித்தார்.



** ஒருமுறை அகத்திய முநிவர் தவம் செய்த போது, விநாயகர் காக்கை உருவில் வந்து அவரது கமண்டலத்தை விளையாட்டாக கவிழ்த்துவிட, காவிரி நதி பிறந்தது.  தவம் கலைந்த அகத்தியர் பார்க்க, விநாயகர் அந்தணச் சிறுவனாய் ஓடினார். கோபத்தில் அகத்தியர் விநாயகரின் காதைத் திருகி, தலையில் குட்ட முயன்றபோது, ஐங்கரனாய் உருமாறியதும், முநிவர் குட்ட ஓங்கிய கரங்களால் தம்மையே குட்டிக் கொள்ள, விநாயகர் தடுத்தார். தம் சன்னிதியில் தோப்புக்கரணம் செய்து சிரத்தில் குட்டிக் கொள்பவர்களின் அறிவு நலம் பெருக வரம் அளித்தார்.

நன்றி-கௌமாரம்.காம். http://www.kaumaram.com/thiru/nnt0004_u.html

அடியேன் குரலொலியில் திருப்புகழ்-https://www.youtube.com/watch?v=XE9d6QSWSKU&list=UUvSbTvTGd7X63HCxCAT3hAA&index=16

வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
முருகா சரணம் 


No comments:

Post a Comment